ஸ்டாலினால் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவர முடிந்ததா? விளாசிய எடப்பாடி பழனிசாமி!
மயிலாடுதுறை: திமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளைக் கூட்டணிக் கட்சிகள் சுமந்து கொண்டுள்ளன என்றும், கூட்டணிக் கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்ததாகக் கூறிய அவர், திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வர முடிந்ததா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை தொடர்ந்து இன்று மயிலாடுதுறையில் உள்ள சீர்காழி பகுதியில் மக்களை சந்தித்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மயிலாடுதுறைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி ஒன்றும் செய்யவில்லை என்று பேசி சென்றிருக்கிறார். நான் மயிலாடுதுறை மாவட்டத்தையே உருவாக்கி கொடுத்திருக்கிறேன். முதல்வராக நான் பொறுப்பேற்ற பின் 6 மாவட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.
11 மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள், 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 பாலிடக்னிக் கல்லூரிகளை உருவாக்கி இருக்கிறோம். இவ்வளவு கல்லூரிகளைத் திறந்த என்னைப் பார்த்து, படிப்பு என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு கசக்கும் என்று கூறி இருக்கிறார் முதல்வர். திமுக ஆட்சிக்கு வந்தபின் ஸ்டாலின் ஒரு மாவட்டத்தை உருவாக்கி இருக்கிறாரா? மருத்துவ கல்லூரியைக் கொண்டு வந்துள்ளாரா?
விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காக டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். ஆனால் இதே பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தவர் ஸ்டாலின். காவிரி பிரச்சனையில் சிறந்த தீர்ப்பைப் பெற்று கொடுத்தது அதிமுக அரசுதான். முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு நல்லாட்சியை கொடுக்கிறார்.
நாட்டு மக்களுக்கு நல்லாட்சியைக் கொடுக்கவில்லை. கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சத்தீவை தாஐ வார்த்தது யார்? காங்கிரஸ் மற்றும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த போது கூட்டணியில் இருந்த திமுக, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தேர்தல் வருவதால், மீனவர்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக கச்சத்தீவு விவகாரம் குறித்து ஸ்டாலின் பேசத் தொடங்கி இருக்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால், அது நல்லக் கட்சி. ஆனால் அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் பாஜக மதவாதக் கட்சியா? அதிமுக ஆட்சியின் போது பிரதமர் மோடி சென்னை வந்த போது கோ பேக் மோடி என்றார்கள். இப்போது வெல்கம் மோடி என்கிறார்கள். திமுக செய்யும் தவறுகளைக் கூட்டணிக் கட்சிகள் சுமந்து கொண்டுள்ளன. கூட்டணி கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications