அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட விரும்பினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவருக்கு தொகுதி வழங்க மறுத்ததாகவும், அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிட விரும்பியதாக கூறப்பட்ட தொகுதிகள் இடம்பெறவில்லை. அண்ணாமலை கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட தயாராகி வந்தார்.

ஆனால் இந்த தொகுதிகள் எதுவும் பாஜகவுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிட பாஜக மேலிட தலைவர்களிடம் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலைக்காக பேசிய பாஜக
இந்நிலையில் தான் அதிமுக - பாஜக கூட்டணியில் என்ன நடந்தது? அண்ணாமலை விரும்பிய தொகுதி எப்படி மிஸ்ஸானது? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையின்போது கட்சி மேலிடம் அண்ணாமலையின் பக்கம் இருந்துள்ளது. அண்ணாமலைக்காக அதிமுகவிடம் பேசி உள்ளது.
அதிமுகவிடம் கேட்ட 3 தொகுதிகள்
அதன்படி சில சில குறிப்பிட்ட தொகுதிகளை அடையாளம் காட்டி தங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாஜக மேலிடம் அதிமுகவிடம் கோரியது. அதில் மிகவும் முக்கியமான தொகுதிகள் என்றால் கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட தொகுதிகளாகும். கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டார். அண்ணாமலை தோற்றாலும் கூட மொத்தம் 4.50 லட்சம் ஓட்டுகளை பெற்றார். இதனால் அந்த தொகுதிகளை பாஜக கேட்டது.
எடப்பாடி எடுத்த முடிவு
ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தனது முடிவே இறுதியானது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதற்கு பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு ஒதுக்கிய சிங்காநல்லூர், சூலூர் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 3 தொகுதிகளையும் டிக் அடிக்கவில்லை. அதற்கு பதிலாக கோவை வடக்கு தொகுதியை மட்டுமே வழங்கி உள்ளார்.
எடப்பாடியின் பிளான் என்ன?
இதற்கு பின்னணியில் முக்கிய விஷயம் ஒன்றும் உள்ளது. அதிமுகவை எடுத்து கொண்டால் டெல்டா, தென்மண்டலங்களில் வீக்காக உள்ளது. அதேபோல் சென்னையிலும் பின்தங்கி உள்ளது. அதிமுகவுக்கு கொங்கு மண்டலம் தான் பலமாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தான் அதிமுக அதிக தொகுதிகளை அள்ளியது.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் 9ல் அதிமுகவினரும் கோவை தெற்கில் கூட்டணியில் இருந்த பாஜகவின் வானதி சீனிவாசனும் வெற்றி பெற்றனர். இதனால் கொங்கு மண்டலம் மற்றும் கோவையை பாஜகவுக்கு விட்டு கொடுக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்து இருக்கலாம்.
ஏனென்றால் கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக தனித்தனி கூட்டணியாக போட்டியிட்டன. அதில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 ஓட்டுகள் பெற்று வென்றார். ஆனால் அதிமுகவை பின்னுக்கு தள்ளி அண்ணாமலை 2ம் இடம் பிடித்தார். அவர் 4,50,132 ஓட்டுகள் பெற்றார்.
அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 ஓட்டுகள் வாங்கி 3ம் இடம் சென்றார். இதனால் கோவையில் அண்ணாமலைக்கு சீட் வழங்குவது எதிர்காலத்தில் அதிமுகவின் பலத்தை குறைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்துள்ளார். இதனால் தான் கோவையில் அண்ணாமலைக்காக பாஜக கோரிய இடங்களை அவர் ஒதுக்க மறுத்துவிட்டார்.
வீக் ஏரியாக்களை தள்ளிவிட்ட எடப்பாடி
அதேபோல் தெற்கு மற்றும் டெல்டா மண்டலங்களில் அதிமுக வீக்காக இருப்பதை அறிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அங்கு அதிகமான தொகுதகிளை பாஜகவுக்கு வங்கி உள்ளார். அதன்படி தென் மண்டலத்தில் சாத்தூர், மதுரை தெற்கு, திருப்பத்தூர், ராமநாதபுரம், மானாமதுரை, திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு,குளச்சல், பத்மநாபபுரம் உள்ளிட்ட தொகுதிகளை வழங்கி உள்ளது.
2024ல் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு என 4 தொகுதிகளை பாஜகவுக்கு தள்ளிவிட்டுள்ளார்.
டெல்டா - 6 அமைச்சர்களின் தொகுதி
அதேபோல் டெல்டாவை எடுத்து கொண்டால் தஞ்சாவூர், திருவாரூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட தொகுதிகளை வழங்கி உள்ளது. மேலும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் 6 தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களாக தற்போதைய அமைச்சர்கள் உள்ளனர்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி பலமான தொகுதிகளை அதிமுக வசம் வைத்து கொண்டு பிற தொகுதிகளை பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட்டுள்ளது. இதன்மூலம் கூட்டணி மற்றுமு் தொகுதி பங்கீட்டில் முற்றிலுமாக எடப்பாடி பழனிச்சாமி கட்டுக்குள் வைத்து எந்த அழுத்தத்திற்கும் பணியாமல் முடிவெடுத்துள்ளது உறுதியாகி உள்ளது.
அழுத்தத்துக்கு பணியாமல்...
அதேபோல் பாஜக மட்டுமின்றி கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள்? என்பதை எடப்பாடி பழனிச்சாமியே இறுதி முடிவு எடுத்து ஒதுக்கி உள்ளார். அதன்படி மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மீதமுள்ள 65 இடங்கள் தான் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதில் பாஜக 27, பாமக 18, அமமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் 5, பாரிவேந்தரின் ஐஜேகே 2, ஜான்பாண்டியின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒன்று வழங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications