“பச்சை பொய் பழனிசாமி”.. எடப்பாடிக்கு வந்த கோபம்! பொய்யில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே தரலாம் என சாடல்
சென்னை: பாதம் தாங்கி பழனிசாமி என முதலமைச்சர் முக ஸ்டாலின் திருவண்ணாமலையில் நடைபெற்ற வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் அடிப்படை ஆதாரம் மற்றும் அரசியல் நாகரிகமின்றி பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "திமுக தலைவர், பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், அவரது கட்சியினரிடம் வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் உள்ளிட்ட பணிகளைப் பற்றி பேசுவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதைப் பற்றி பேசாமல், அவருடைய பேச்சில், பாதிக்கும் மேல் என்னைப் பற்றி பேசியதில் இருந்தே, அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்பது நன்கு விளங்குகிறது,
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழாவில் பேசும்போது, 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகத் தம்பட்டம் அடித்தார். அதனால்தான், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு அவற்றின் நிலை என்ன என்று நான் கேட்டேன். மேலும், கடந்த 29 மாத கால விடியா திமுக ஆட்சியில் தமிழக மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் பாதிப்புகளை நீக்க விடியா திமுக அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சட்டமன்றத்திலும், ஊடகங்களிலும் கூறி வருகிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்ற 29 மாத காலத்தில் விவசாயப் பெருமக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், முதியவர்கள், பெண்கள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமும் கெட்டப் பெயரை சம்பாதித்துள்ள நிர்வாகத் திறனற்ற, பொம்மை முதலமைச்சர், திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் ஆவார். திரு. ஸ்டாலின் அவர்களது குடும்ப ஊழல் பெருமையைப் பற்றி, அப்போதைய நிதியமைச்சர் பேசிய ஒலி நாடா சமூக ஊடகங்களில் வெளிவந்ததை வசதியாக மறந்துவிட்டார்.
மேலும், ஊழல் செய்துவிட்டு சிறைக்குச் சென்ற இலாக்கா இல்லாத அமைச்சரை, சென்னை உயர்நீதிமன்றமே தார்மீக ரீதியாக முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமென்று தெரிவித்தும், ஊழல் அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்காதது கேலிக்கூத்தாக உள்ளது. காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்து - ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனோ - கொண்ட காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே என்று, யார் யார் மூலம் கோடிகளில் பணம் கிடைக்குமோ, அவர்களின் பாதங்களைத் தாங்கும் பணியை கொள்கையாகக் கொண்ட கட்சியின் தலைவர், நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் / தன்மானமும் கொண்ட எங்களைப் பார்த்து பாதந்தாங்கிகள் என்பது நகைச்சுவையானது.
திரு. ஸ்டாலின் திருவண்ணாமலையில் அவரது கட்சியினரிடம் பேசும்போது, என்னை பச்சைப் பொய் பழனிசாமி என்று பேசியுள்ளார். பொய் பேசுவதில் கை தேர்ந்தவர் திரு. ஸ்டாலின். பொய் பேசுவதில் 'நோபல் பரிசு' கொடுப்பதாக அறிவித்தால், திரு. ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். நான் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, எங்களுடைய மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆட்சியில் உள்ளிட்டவற்றையும், அம்மாவின் அரசால் ஆரம்பிக்கப்பட்ட, நடைபெற்று வந்த மற்றும் முடிவுற்ற பணிகளையும், புதிதாக ஆரம்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டட மருத்துவக் கல்லூரிகளையும், புதிதாக கட்டப்பட்ட பாலங்களையும், தமிழக நகரங்களில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் முடிவுற்ற பணிகளையும் தான் திரு. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன்.
திரு. ஸ்டாலினிடம், உங்களது 29 மாதகால விடியா திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ன என்று கேட்டால், அதைப் பற்றி பேசாமல், மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல், திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக தமிழக மக்களிடையே பொய் பேசுகிறார். ஏனெனில், 29 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காக திரு. ஸ்டாலின் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை; செயல்படுத்தவில்லை.

தான் வகிப்பது பெருமை மிக்க முதலமைச்சர் பதவி என்பதை மறந்து, என் மீதும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் பாய்ந்து பிறாண்டியிருப்பது, 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்' என்ற பழமொழியை நிரூபிப்பதாக உள்ளது. இனியாவது திரு. ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்தவிட்டு, தமிழ் நாட்டில் நிலைமை என்ன, தமிழக மக்கள் திமுக-வைப் பற்றியும், அவரைப் பற்றியும் என்ன பேசுகிறார்கள் என்று தனது காவல் துறையை வைத்து விசாரித்துவிட்டு, இனியாவது உண்மையாகவே தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்தவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications