ராஜ்யசபா சீட்! அதிமுகவில் ஓங்கும் எடப்பாடி பழனிசாமி கை! ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நிலை?
சென்னை: அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் தேர்வில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியின் கையே மீண்டும் ஓங்கத் தொடங்கியிருக்கிறது.
அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ள நிலையில், அந்த இரண்டு பேரையும் தேர்வு செய்வதில் இ.பி.எஸ். முகாம் தான் முதலிடத்தில் இருக்கிறதாம்.
வழக்கம் போல் ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரத்திலும் பொறுமையையும், அமைதியையும் மட்டுமே கடைபிடிப்பதாக கூறுகிறார்கள் உள் விவரமறிந்தவர்கள்.

ராஜ்யசபா தேர்தல்
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா பதவியிடங்களுக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் திமுக 4 இடங்களும் அதிமுக 2 இடங்களும் கைப்பற்ற முடியும். இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் வேட்பாளர் தேர்வு செய்யும் படலம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுகவை காட்டிலும் அதிமுகவில் சீட் வாங்குவதற்காக போட்டி அதிகமாக உள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மிக கவனமாக இருந்து வருகிறார்.

ஓங்கும் கை
ராஜ்யசபா வேட்பாளர் தேர்வில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் கை தான் ஓங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஓ.பி.எஸ். வழக்கம் போல் தனது பொறுமையையும், அமைதியையும் மட்டுமே தன்னிடம் ராஜ்யசபா சீட் கேட்பவர்களுக்கு பதிலாக தருகிறாராம். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம் காணப்படவில்லை. இ.பி.எஸ்.க்கு இதுவரை நூற்றுக்கணக்கான கடிதங்கள் ராஜ்யசபா சீட் கேட்டு வரப்பெற்றுள்ளதாம். ஆதரவாளர், விசுவாசி, என இரண்டு அளவுகோல்களின் அடிப்படையில் இ.பி.எஸ். வேட்பாளர்களை டிக் அடிக்க உள்ளார். நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல் யாரும் எதிர்பார்க்காத ஒருவருக்கு ராஜ்யசபா சீட்டை கொடுத்து தாம் என்றுமே ஜெயலலிதா வழியில் நடக்கிறேன் என்பதை உணர்த்தவுள்ளாராம்.

முக்கியப் பிரமுகர்கள்
அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் கீர்த்திகா முனியசாமி, வழக்கறிஞர்கள் இன்பதுரை, பாபு முருகவேல், என முக்கியப் பிரமுகர்கள் லிஸ்ட் நீள்கிறது. இதனால் மிகுந்த கவனத்துடன் வேட்பாளர் தேர்வு விவகாரத்தை இ.பி.எஸ். கையாண்டு வருகிறார். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் இருக்கும் இரண்டு இடங்களில் ஒரு இடத்தை பாஜகவும் ஆரம்பக்கட்டத்தில் எதிர்பார்த்து காய் நகர்த்தியது. அதனை திறமையாக கையாண்டு சமயோஜிதமாக பேசி பாஜக விரித்த வலையிலிருந்து தப்பினார் எடப்பாடி பழனிசாமி.

கடந்த முறை
கடந்த முறை பாஜக கோட்டாவில் அதிமுக சார்பில் ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட் வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது போல் அல்லாமல் இந்த முறை இரண்டு இடங்களிலும் அதிமுகவே களம் காணவுள்ளது. ராஜ்யசபா தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியின் கவனம் கட்சியின் பொதுக்குழுவை நோக்கி இருக்கும் என்கிறார்கள் உள் விவரமறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications