கைகூடி வந்தாச்சு.. இனி முதல் குறியே 'அங்கேதான்'.. எடப்பாடி பழனிசாமி எடுத்த அஸ்திரம்.. தடதடக்கும் தெற்கு
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டுள்ள நிலையில், தன்னுடைய முதல் குறியை தென்மண்டலங்களில் வீசியுள்ளதாக தெரிகிறது.. இதற்கான சில உத்தரவுகளையும் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு ஜூலையில் சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், கட்சியில் ஒற்றை தலைமையை கொண்டு வருவது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவது போன்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. இதை ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக எதிர்த்தனர். அதன் பின்னர் ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து இந்த பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச் செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதித்தார். ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று மார்ச் 19ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த அவர், கடந்த ஜீலை மாதம் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீரப்பளித்தார். அதேபோல, பொது செயலாளர் தேர்தல் முடிவுக அறிவிக்க தடை இல்லயென்றும் அறிவித்தார்.

சீனியர்களின் வருத்தம்
இதனையடுத்து நேற்றே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பஞ்சாயத்துக்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. இப்போதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு கள ரீதியான சவால்கள் காத்திருக்கின்றன. நீதிமன்றம் சென்று கட்சிக்கு நான்தான் எல்லாம் எனகிற உத்தரவை பெற்று வந்துவிட்டால் களத்தில் அது பிரதிபலித்துவிடாது. ஜெயலலிதா இருந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவு இருந்தது. ஆனால், தற்போது இந்த ஆதரவு கொங்கு மண்டலத்தோடு சுருங்கிவிட்டது என்று கட்சியின் சீனியர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர். ஈரோடு தேர்தலையடுத்து இந்த கவலை மேலும் அதிகரித்துள்ளது.

தேர்தல் தோல்வி
ஈரோடு தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்தது கொங்கு மண்டலத்தில் கட்சியின் பலத்தை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை எழுப்பியுள்ளது. இந்த தேர்தல் தொடங்கியபோதே கூட்டணி கட்சிகளுக்கு சீட்டை ஒதுக்கி விடலாம் என்று எடப்பாடியிடம் சீனியர்கள் கூற, விடாப்பிடியாக எடப்பாடி இந்த தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரை நிறுத்தினார். இங்கிருந்தே பஞ்சாயத்து தொடங்கிவிட்டது. வேட்பாளரை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்று சீனியர்களிடமும், நிர்வாகிகளிடமும் எடப்பாடி வலியுறுத்த, அவர்களோ "இவரு தன்னை நிரூபிக்க நாங்கள் ஏன் இப்படி கஷ்டப்படனும்?" எனும் தோரணையில் மந்த கதியில் வேலையை செய்து வந்தனர்.

பொறுமைக்கான காரணம்
திமுக இந்த தொகுதியில் பல அதிரடியான ஆட்டங்களை ஆடிக்கொண்டிருந்த நிலையில், அதிமுகவின் பல மாஜிக்களின் கார்கள் மட்டுமே தொகுதிக்கு சென்றதாகவும், ஆனால் கால்கள் தொகுதியில் இறங்கவில்லை என்றும் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். அதேபோல ஈடுரோடு மாவட்ட செயலாளர், தேர்தலில் குறிப்பிட்ட அளவு எந்த செலவுகளையும் செய்யவில்லை என்று புகார்கள் சென்றிருக்கிறது. ஏறத்தாழ இதேபோல மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள் இதே பாணியில்தான் செயல்பட்டு வருகிறார்கள் என்பது எடப்பாடியின் காதுகளுக்கு எட்டாமல் இல்லை. ஆனாலும் எடப்பாடியார் பொறுமை காத்து வந்தார். காரணம் பொதுச் செயலாளர் பதவிதான்.

கைகூடிய தீர்ப்பு
ஏனெனில் பொறுப்பு கைக்கு வருவதற்கு முன்னர் நாம் ஏதாவது அதிரடி நடவடிக்கையில் இறங்கிவிட்டால் நிர்வாகிகள் அதிருப்தியடைந்து ஓபிஎஸ் பக்கம் சென்றுவிடுவார்களோ? என்கிற அச்சம் இருந்தது. இந்நிலையில் தற்போது பொறுப்பு கையில் கிடைத்திருக்கும் நிலையில் தனது அதிரடி நடவடிக்கைகளை எடப்பாடி விரைவிலில் தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல ஓபிஎஸ் தரப்பினர் முன்வைக்கும் முக்கியமான விமர்சனம் வன்னியர் சமூக மக்களுக்கான 10.5 சதவிகித உள்இடஒதுக்கீடு கொடுத்ததன் மூலம் முக்குலத்தோர் சமூக மக்களை கைவிட்டுவிட்டார் என்பதுதான். இந்த இடஒதுக்கீடு செல்லாது என்று நீதிமன்றமும் அறிவித்துவிட்ட நிலையில், இந்த விமர்சனத்தை ஓபிஎஸ் தொடர்ந்து வைத்து வருகிறார்.

திட்டம்
இப்படி இருக்கும் நிலையில்தான் தென் மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த எடப்பாடி முயன்று வருகிறார். ஏற்கெனவே ஓபிஎஸ் விமர்சனத்திற்கு அதிமுக தலைவர்கள் எதுவும் பெரியதாக ரியாக்ஷன் செய்யவில்லை. இதை கவனித்த அமைச்சர்கள் ஓபிஎஸ் தரப்பில் சமரசமே கூடாது என்று கூறியுள்ளனர். எனவே இந்த பிரச்னைக்கு எடப்பாடி பழனிசாமி யோசனை செய்து வருகிறார். இதற்காக சீனியர்களிடம் ஒரு திட்டம் தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எப்படி இருப்பினும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் தென்மாவட்டங்களில் தங்கள் செல்வாக்கை வளர்ப்பதே எடப்பாடியின் நோக்கமாகும்.

மரியாதை
அதன்படி, தென்மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி இனி அதிக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறாராம்.. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தென்மண்டலத்தை சேர்ந்த தியாகிகள், தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி, அந்த தலைவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும் இனி பங்கேற்க போகிறாராம்.. இதனால், அச்சமூக மக்களின் வாக்குகளை பெற முடியும் என்று எடப்பாடி நம்புகிறாராம்.. அதுமட்டுமல்ல, தென்மண்டலங்களில் டிடிவி தினகரனுக்கு உள்ள வாக்கு வங்கியை உடைப்பற்காக, அமமுக அதிருப்தியாளர்களுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. மேலும், ஓபிஎஸ் தரப்பு தற்போது அடுத்தடுத்த அப்செட்களில் உள்ளதால், இந்த சந்தர்ப்பத்தையும் தனக்காக பயன்படுத்தி கொள்ள எடப்பாடி நினைக்கிறாராம்.












Click it and Unblock the Notifications