அதிமுகவில் பொதுச்செயலாளருக்கு தான் அதிகாரம்.. எடப்பாடி சொன்னால்தான்.. நயினார் நாகேந்திரன் ஒரே போடு
சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என ஜெயக்குமார் கூறிய நிலையில், என்னை பொறுத்தவரை அதிமுகவில் பொதுச்செயலாளாருக்கு தான் முழு அதிகாரம் உண்டு என நினைக்கிறேன். எனவே, எடப்பாடி சொன்னால்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டது. தொடர்ந்து பாஜக உடன் இணக்கமான போக்கையே அதிமுக கடைபிடித்து வருகிறது. எனினும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் அவ்வப்போது அதிமுக பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக ஜெயக்குமார் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அண்மையில், அண்ணாமலை, பேரறிஞர் அண்ணாவை விமர்சித்து கருத்து கூறியதற்கு மீண்டும் அதிமுக கடும் எதிர்வினையாற்றியது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அண்ணாமலையை கண்டித்து கடுமையாக பேசினர்.
இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. கடந்த 18 ஆம் தேதி செய்தியாளகளை சந்தித்த ஜெயக்குமார், பாஜக கூட்டணியில் அதிமுக தற்போது இல்லை என்றும் தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் எனவும் பேசினார். இதையடுத்து, நேற்று முன் தினம் அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசியிருந்தனர்.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணி நிலை என்ன என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். மேலும் "கடந்த 18 ஆம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது வேறு எதுவும் கூற இயலாது" என்றார்.

ஜெயக்குமார் பேசியது தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், அதிமுகவில் பொதுச்செயலாளாருக்கு தான் முழு அதிகாரம் உண்டு என நினைக்கிறேன். எனவே, எடப்பாடி சொன்னால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்" என்றார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:- நான் அதிமுகவில் இருந்து வெளிவந்து 7 அல்லது 8 ஆண்டுகள் ஆகிவிட்டது.
என்னை பொறுத்தவரை பொதுச்செயலாளாருக்கு தான் முழு அதிகாரம் உண்டு என நினைக்கிறேன். நான் அண்ணனாக நினைக்கின்ற மதிப்புக்குரிய ஜெயக்குமார் அவர்கள் எந்த சூழ்நிலையில் அப்படி கூறினார் என்று எனக்கு தெரியவில்லை. இந்த கருத்தை பொதுச்செயலாளர் பதவியில் இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொன்னால் தான் ஏற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications