அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் இல்லையாம்.. “நோ சேஞ்ச்”.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன எடப்பாடி!
அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப் போவதில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப் போவதில்லை என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "பிப்.19, 20-ல் இடைத்தேர்தலுக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய உள்ளார். ஏற்கனவே அறிவித்ததுபோல நாங்கள் பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய நாட்களில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளோம்" என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு களமிறங்கியுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் தென்னரசுவுக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இதனால், பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

கரைவேட்டிகள்
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஈரோடு கிழக்கு தொகுதி கரைவேட்டிகளால் பரபரக்கிறது. அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். எடப்பாடி பழனிசாமி, பிப்ரவரி 15, 16, 17 மற்றும் 24, 25 ஆகிய 5 நாட்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அண்ணாமலை பிளான்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அண்ணாமலை வரும் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் வெவ்வேறு நாட்களில் ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இதனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்வாரா மாட்டாரா எனும் கேள்விகள் எழுந்தன.

ஈபிஎஸ் + அண்ணாமலை
ஏற்கனவே, அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. அண்ணாமலை மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் இலங்கைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், பிரச்சாரத்திலாவது ஈபிஎஸ்ஸும் அண்ணாமலையும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று அதற்கும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஈபிஎஸ் ஆலோசனை
ஈரோட்டில், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். ஈரோடு அருகே வில்லரசம்பட்டி தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கருப்பண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இணைந்து பிரச்சாரம் இல்லை
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் செய்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை, பிப்.19, 20-ல் இடைத்தேர்தலுக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய உள்ளார். ஏற்கனவே அறிவித்ததுபோல பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய நாட்களில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகளை விமர்சித்த ஈபிஎஸ்
மேலும் திமுக கூட்டணி கட்சிகளை விமர்சித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் யாரும் நீட் தேர்வு ரத்து குறித்து குரல் கொடுக்கவில்லை. முதல் கையெழுத்து நீட் ரத்து எனக் கூறினார்கள் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. மக்களின் பிரச்னைகள் எதையும் திமுக பொருட்படுத்தவில்லை, மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். இதற்கு குரல் கொடுக்காத கட்சிகள் அடிமைக் கட்சிகளாக உள்ளன. 85% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக திமுகவினர் பச்சை பொய் சொல்கிறார்கள். 8 வழிச்சாலையை அதிமுக ஆட்சியின் போது எதிர்த்தவர்கள் தற்பொழுது அதை கொண்டு வருகிறார்கள், அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி மௌனம் காக்கிறது." என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications