நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில்
திருச்சி: பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை போல் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படுமோ என்று ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுகவை கபளீகரம் செய்ய வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை என்று கூறிய நயினார் நாகேந்திரன், பீகாரில் நிதிஷ் குமார் மகனுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த தேர்தலில் பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதேபோல் சிராக் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி 19 இடங்களில் வென்றது. இதையடுத்து பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் பதவியேற்றார்.

தற்போது ஆட்சி அமைத்து 4 மாதங்களே ஆகும் சூழலில், திடீரென நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ்ய சபாவுக்கு செல்ல இருக்கிறார். இதனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். இது தமிழ்நாட்டிலும் எதிரொலித்து வருகிறது. ஏனென்றால் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளன. கூட்டணியில் உள்ள கட்சியின் பிடி பாஜக வசம் இருக்கிறது.
இதனால் இதுவரை தொகுதி பங்கீடு நிறைவடையாமல் இழுபறியில் இருக்கிறது. இதனிடையே அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நிதிஷ் குமார் நிலைமை தான் எடப்பாடி பழனிசாமிக்கு வரும் என்றும், அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது, இந்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நயினார் நாகேந்திரன், எந்தக் கட்சியையும் கபளீகரம் செய்ய வேண்டிய தேவை பாஜகவுக்கு கிடையாது. அது எங்களுக்கு தெரியாது. பீகார் விவகாரத்தை பொறுத்தவரை பாஜக அதிக எம்எல்ஏ-க்களை வென்றிருந்தாலும் கூட, முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார். இத்தனை மாதங்களாக அவர் இருந்தார். இப்போது சூழல் மாறி இருக்கிறது.
இருந்தாலும் நிதிஷ் குமாரின் மகன் துணை முதல்வராகி இருக்கிறார். அதனால் எந்த கபளீகரமும் பாஜக செய்யவில்லை. ஸ்டாலினும் அதனைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அதனால் இனி மக்கள் மனதில் திமுகவுக்கு இடமும் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, டீசல், பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைத்த போதும் கூட திமுக மாநில அரசு வரியை குறைக்க முன் வரவில்லை. எல்பிஜி சிலிண்டர் விவகாரத்தில் நாங்கள் மானியம் கொடுத்து வந்திருக்கிறோம். மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். ஆனால் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக நயினார் நாகேந்திரன் கருத்து சொல்லாமல் கடந்து சென்றார்.












Click it and Unblock the Notifications