அசராத எடப்பாடி.. லோக்சபா தேர்தல் வியூகம்.. அதிமுக அலுவலகத்தில் நடத்திய முக்கிய மீட்டிங்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் நிர்வாக ரீதியாக உள்ள 82 மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. தேசிய அளவில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு " இந்தியா" என்ற கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸ், திமுக , திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அதிரடியாக அறிவித்தது. வரும் லோக்சபா தேர்தல் மட்டும் இன்றி சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவோடு கூட்டணி கிடையாது என அதிமுக கூறி வருகிறது. அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் எப்படியாவது கொண்டு வந்து விட வேண்டும் என்று அக்கட்சியின் டெல்லி தலைமை விரும்பியதாக கூறப்படுகிறது.
82 பொறுப்பாளர்கள்: இதற்காக அதிமுக தலைமையுடன் பேச முயன்றதாகவும் ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் பிடி கொடுக்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது ஒருபக்கம் என்றால் கட்சியில் நிர்வாக ரீதியாக பலபப்டுத்தும் வகையில், தேர்தலை மனதில் வைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடப்பாடி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அண்மையில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை அதிமுக நியமித்தது.
சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பணியினை பார்வையிட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. நடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதை மேற்பார்வையிட அமைப்பு ரீதியான 82 மாவட்டங்களுக்கும் 82 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
52 வது ஆண்டு தொடக்கவிழா: முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் , பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மு.தம்பிதுரை, செ. செம்மலை , பா. வளர்மதி ,கோகுல இந்திரா, கரூர் M. சின்னசாமி,கருப்பசாமி பாண்டியன் உள்ள்பட மூத்த நிர்வாகிகள் பலரும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
தேர்தல் வியூகம்: இந்த நிலையில், பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தலுல் வியூகம், மாவட்ட வாரியாக தேர்தல் பணிகளை மேற்கொள்வது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்கவிழாவும் இன்று நடைபெற்றது.
அதைக் கொண்டாட சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதிமுக தொண்டர்களும் கட்சி அலுவலகத்தில் திரண்டு இருந்தனர். இதனால், அதிமுக அலுவலகம் இன்று காலை முதல் பரபரப்பாக காட்சி அளித்தது.












Click it and Unblock the Notifications