‛திடீர் மனமாற்றம்’.. 3வது முறையாக பிரதமராகும் மோடி.. மோதலுக்கு நடுவே எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக கழற்றி விடப்பட்டது. இந்நிலையில் தான் 2014, 2019 ம் ஆண்டை தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோடி நாளை மீண்டும் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் நம்பர் 272 கிடைக்கவில்லை.

யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கிறது.
இதுதொடர்பாக நேற்று டெல்லி பழைய நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற லோக்சபாவில் பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவர் அனுமதி வழங்கி உள்ள நிலையில் நாளை இரவு ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஏற்கனவே அவர் 2014, 2019 ஆண்டுகளில் பிரதமராக செயல்பட்ட நிலையில் நாளை பதவியேற்பதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக உள்ளார்.
இதன்மூலம் அவர் முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை அவர் சமன் செய்ய உள்ளார். இத்தகைய சூழலில் தான் மோடிக்கு அவரது கூட்டணி கட்சி தலைவர்கள், உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. ஆனால் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது. மேலும் இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி உள்பட முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதோடு அதிமுக மற்றும் பாஜக இடையே அடிக்கடி வார்த்தை போர் நீடித்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் எடப்பாடி பழனிச்சாமி, 3வது முறையாக பிரதமராக போகும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ‛'இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திரமோடிக்கு அதிமுக மற்றும் எனது சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications