நாங்க தெம்பா இருக்கோம்..அங்க தான் கால் நடுங்குது! சட்டசபையில் எடப்பாடி தக் லைஃப்..3 மணி நேரம் பேச்சு
சென்னை: காய்ச்சல் காரணமாக 3 நாட்களாக சட்டசபைக்கு வராத அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சுமார் 3 மணி நேரம் பேசினார். அப்போது எல்லோரும் சோர்வாக இருக்காங்க என சபாநாயகர் பேச நாங்க தெம்பா தான் இருக்கிறோம்.. அங்க இருக்கவங்களுக்கு தான் கால் நடுங்குது என பதில் கொடுத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்பது மரபு. ஆனால் தேசிய கீதம் இசைக்கவில்லை என ஆளுநர் தனது உரையை புறக்கணித்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆளுநர் உரை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார் அப்போது அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின் பூரண குணமடைய வாழ்த்தினார். தொடர்ந்து நீட் தேர்வு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்ப முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதிலளித்தனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என கேள்வி கேட்க, நீட் தேர்வு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, நாங்கள் ரத்து செய்வதற்கான முழு முயற்சி மேற்கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று? ஆட்சி முடிய இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது என கேட்க, நீட் தேர்வு ரத்துக்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்று நாங்கள் கூறியது உண்மைதான். எங்கள் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரவில்லை. ராகுல்காந்தி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை ஆனால் இப்போது மத்தியில ஆட்சியில் இருப்பது நீங்கள் முன்பு ஆதரவளித்த பாஜக. நாங்கள் கூட்டணியில் இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவில்லை. ஜெ. இருந்தவரை கூட நீட் தேர்வு தமிழகத்தில் இல்லை. நீங்கள் முதல்வராக வந்த பின்தான் நீட் வந்தது
ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக திமுக தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது என எடப்பாடி பழனிசாமி கூற, எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தோம், நீட் தேர்வை ரத்து செய்வது மத்திய அரசுதான் செய்ய வேண்டும் மாநில அரசால் செய்ய முடியாது இந்த அடிப்படை தெரியாதா எதிர்க்கட்சித் தலைவருக்கு?ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை மாநில அரசு எப்படி ரத்து செய்ய முடியும்? சராசரி அறிவு இருந்தால் கூட இது தெரியும்
ஆட்சிக்கு வந்தால் நாங்கள் நீட்டை ஒழிக்க முதல் கையெழுத்து போடுவோம் என்றெல்லாம் சொல்லவில்லை. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நீட்டை நீக்குவோம் என்றுதான் கூறியிருந்தோம் என்றார். அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு வரும் முன்பு திமுக ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு என கூற, தேர்தலுக்கு முன்பு என்ன சொன்னாலும் இப்போது என்ன செய்யவில்லை என சொல்லுங்கள் என்றார்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில் இன்று அவைக்கு வந்திருந்தார். அப்போது மிகவும் சோர்வாக காணப்பட்ட அவர் பூரண குணமடைய வேண்டுமென முதல்வர் பேச்சின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டார். சரியாக 1.40 மணிக்கு தனது பேச்சை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி 3.50 வரை பேசிக் கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அவரது பேச்சு தொடர்ந்தது. 3 மணி அளவில் எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சம் அயர்ந்து அமர்ந்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு ரொம்ப டயர்டா இருக்கீங்க.. ரெஸ்ட் எடுத்துக்குங்க என்றார். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி 'நாங்க தெம்பா தான் இருக்கும்.. அங்க இருக்கவங்களுக்கு தான் கால் நடுங்குது" என்றார் என்கின்றனர் சட்டசபையில் இருந்த செய்தியாளர்கள்.












Click it and Unblock the Notifications