கொடநாடு விவகாரம்.. கைதான சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு.. நள்ளிரவில் நீதிபதி அதிரடி
சயான், மனோஜ் இருவரையும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Recommended Video
சென்னை: கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொடநாடு மர்ம கொலை, மற்றும் கொள்ளை தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்யூஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதில், கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
கோர்ட்டில் ஆஜர்
இந்த விவகாரம் தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீஸார் டெல்லியில் கைது செய்தனர். பின்னர் நேற்று அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தினர்.
சரமாரி கேள்வி
அப்போது நீதிபதி சரிதா இது சம்பந்தமான பல்வேறு கேள்விகளை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் எழுப்பினார். 'இருவரது பேட்டியால் எங்கே கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது?' என கேட்டதுடன், அதற்குரிய விளக்கத்தினையும் அளிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
இருவரும் ஆஜர்
இதன்காரணமாக போலீசாரின் வேண்டுகோளின்படி இருவரையும் சிறையில் அடைக்கவும் நீதிபதி மறுத்துவிட்டார். இதையடுத்து, நள்ளிரவு நீதிபதி சரிதா வீட்டில் சயான், மனோஜ் இருவரும் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போதும் நீதிபதி போலீசாரிடம் ஏற்கனவே கேட்ட கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பினார்.
விடுவிக்க உத்தரவு
ஆனால் அதற்கு போலீசார் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று கூறி, சயான், மனோஜ் இருவரையும் சிறைக்கு அனுப்ப திட்டவட்டமாக மறுத்துவிட்டதுடன், அவர்களை விடுவிக்கவும் உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட சயான், மனோஜ் இருவரும் வரும் 18ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினம் வழக்கறிஞருடன் 10 ஆயிரம் ரூபாய் பிணையுடன் வருமாறும் நீதிபதி சரிதா ஆணையிட்டார்.