3ஆம் அலையில் குழந்தைகளுக்கு அதிக ஆபத்து.. இந்த 3 விஷயம் முக்கியம்.. மருத்துவர் சீனிவாசன் ஆலோசனை
சென்னை: கொரோனா 3ஆம் அலையில் குழந்தைகள் மத்தியில் கொரோனா பரவ அதிக வாய்ப்புகள் இருந்தாலும், அதை எளிதாகத் தடுக்கலாம் எனச் சென்னை எழும்பூர் அரசு குழந்தை நல மருத்துவமனை மருத்துவர் சீனிவாசன் ஒன் இந்தியா தளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையுடன் ஒப்பிடுகையில் 2ஆம் அலையில் சிறார்கள் மத்தியிலான வைரஸ் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
இது குறித்து சென்னை எழும்பூர் அரசு குழந்தை நல மருத்துவமனை மருத்துவர் சீனிவாசன் ஒன் இந்தியா தளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், " கொரோனா 2ஆம் அலையில் குழந்தைகள் அதிகளவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாகப் பலரும் சந்தேகிக்கின்றனர். அது ஒரு வகையில் பார்த்தால் உண்மையும்தான்.

குழந்தைகளுக்கு கொரோனா
குழந்தைகள் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது, தரவுகளைப் பார்த்தால் இது தெளிவாகத் தெரிகிறது. அதாவது கொத்து கொத்தாக வைரஸ் பரவல் ஏற்படுகிறது. வைரஸ் பரவலின் தீவிர தன்மை அதிகரித்துள்ள அதேநிலையில், மக்களும் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவதிலிருந்து தவறிவிட்டோம். முதல் அலையில் குழந்தைகளுக்குக் காய்ச்சலே முக்கியமான அறிகுறியாக இருந்தது. இப்போது வயிற்றுப் போக்கு ஆகியவையும் அறிகுறிகளாக உள்ளன.

உயிரிழப்புகள்
உயிரிழப்புகளைப் பொறுத்தவரை முதல் அலைக்கும் 2ஆம் அலைக்கும் பெரியளவில் வேறுபாடு இல்லை. கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எளிதாகக் குணமடைந்து விடுகிறார்கள். அதேநேரம் அவர்களுக்கு எதாவது இணை நோய்கள் இருந்தால், கூடுதல் சிக்கல் ஏற்படும். அதேபோல அடுத்த வரும் 3ஆம் அலையில் குழந்தைகள் மத்தியில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

யாருக்குப் பாதிப்பு அதிகம்
10 முதல் 18 வயதுடைய குழந்தைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவே நான் கருதுகிறேன். ஏனென்றால் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாம் அதிகம் தடுப்பூசிகளைச் செலுத்துகிறோம். இதனால் அவர்கள் உடலில் உருவாகும் intact immune system காரணமாக தடுப்பாற்றல் சிறப்பாக உள்ளன. ஆனால் 10-18 வயதுடையவர்களுக்கு TT தவிரப் பெரியளவில் நாம் எந்த தடுப்பூசிகளையும் செலுத்துவதில்லை. எனவே, 10 வயதுக்கு மேல் ஆன்டிபாடிகள் குறைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த வயதுடையவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

3 விஷயங்கள்
குழந்தைகள் கொரோனாவில் இருந்து காக்கவும் அதே 3 விஷயங்கள் தான். மாஸ்க்குகளை அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கைகளைச் சோப்புகளைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். இதை நாம் குழந்தைகளுக்கு முறையாகச் சொல்லித் தர வேண்டும். குழந்தைகளை தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வைப்பது கடினம். முக்கியமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், குழந்தைகள் மத்தியில் வைரஸ் பரவல் குறைவாகவே உள்ளது.
சிகிச்சை முறை
தற்போது வரை குழந்தைகளுக்கு supportive treatment தான் அளித்து வருகிறோம். அதாவது காய்ச்சல் வந்தால், அதைக் குறைக்கச் சிகிச்சை, நீர்ச்சத்து குறைந்தால் அதற்குத் தேவையான சிகிச்சை ஆகியவற்றை அளித்து வருகிறோம். இளைஞர்களுக்கு அளிக்கப்படுவது போல ஒரு குறிப்பிட்ட மருந்து இதுவரை பரிந்துரை செய்யப்படவில்லை" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications