எகிப்து வெங்காயம் இன்று முதல் சென்னை பசுமை பண்ணை கடைகளில் விற்பனை - இனி கண்ணீர் வராது
காரம் குறைவான கண்ணீர் வராத எகிப்து வெங்காயம் சென்னைக்கு வந்துள்ளது.
சென்னை: வெங்காய விலை கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால் தமிழக அரசு சார்பில் பசுமை பண்ணை கடைகளில் ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வெங்காய விற்பனையை தொடங்கி வைத்துள்ளார்.
Recommended Video
தெலுங்கானா ஆந்திராவில், வட கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வெங்காய வரத்து குறைந்துள்ளது. 400 டன் வெங்காயம் மட்டுமே வருவதால் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 40 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சென்னைக்கு வந்துள்ளது. இன்று முதல் பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எகிப்தில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயம் இந்தியாவில் விளையும் வெங்காயத்தை போன்று இல்லாமல் காரம் குறைவாகவும், கண் எரிச்சலை ஏற்படுத்தாத வகையிலும் இருக்கும். இல்லத்தரசிகள் இனி கண்ணீர் சிந்தாமல் வெங்காயத்தை உரிக்கலாம்.
எகிப்தில் விளையும் ஒரு வெங்காயமே 200 கிராம் முதல் 600 கிராம் வரை இருக்கும். இந்த வெங்காயத்தை, இந்திய வெங்காயம் போல நீண்ட நாட்கள் சேமித்து வைத்து விற்பனை செய்ய முடியாது. பத்து முதல் 15 நாட்கள் வரை மட்டுமே இந்த வெங்காயம், தாக்குபிடிக்கும். அதற்கு மேல் வைத்திருந்தால் அழுகிவிட அதிக வாய்ப்புள்ளது.