"விஜய் 8% வாக்குகளை பெற மாட்டார், ஆனால்.." கடைசியில் பெரிய ட்விஸ்ட் வைத்த பிரசாந்த் கிஷோர்
சென்னை: தமிழ்நாட்டில் விஜய் தவெக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளது அனைவருக்கும் தெரியும். அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக களமிறங்கவுள்ள நிலையில், அவர்கள் எத்தனை தொகுதிகளில் வெல்வார்கள்.. எத்தனை சதவிகிதம் வாக்குகளைப் பெற வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் அவருடன் பிரசாந்த் கிஷோரும் மேடையில் ஏறியது பலருக்கும் ஆச்சரியத்தை அளிப்பதாகவே இருந்தது.

பிரசாந்த் கிஷோர்
அடுத்த சட்டசபைத் தேர்தலில் விஜய் கட்சி களமிறங்கும் சூழலில், அதற்குத் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே தந்தி டிவிக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் அடுத்த சட்டசபைத் தேர்தல் குறித்தும் விஜய் கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், "விஜய் என்று இல்லை.. யாராக இருந்தாலும் மக்களுக்கு என்ன புதிய விஷயத்தை எடுத்து வருகிறார்கள் என்பதே முக்கியம்.! ஏற்கனவே உள்ளவற்றில் இருந்து மாறுபட்டு இருந்தால் நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது" என்றார்.
சினிமா பிரபலங்கள்
கடந்த காலங்களில் பல சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு முயன்றும் முடியாமல் போன நிலையில், விஜய் எப்படி மாறுபட்டு இருக்கிறார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "நான் இவர்களின் அரசியல் பயணம் குறித்துக் கூர்ந்து படித்தது இல்லை. பலரும் நினைத்தது போல.. அவர்கள் மிகப் பெரிய அரசியல் தலைவராக உருவெடுக்க முடியாமல் போக என்ன காரணம் என்பதை நான் பகுப்பாய்வு செய்யவில்லை.
ஆனால், தற்போதைய தமிழ்நாடு அரசியலைப் பார்க்கும் போது இங்கு மிகப் பெரிய வெற்றிடம் இருப்பாகவே உணர்கிறேன். இப்போது பெரும்பாலான மக்கள் ஊழலற்ற புதிய அரசியல் மாற்றை எதிர்நோக்குகிறார்கள். அதற்கு விஜய் சரியான நபராக இருப்பார் என்றே கருதுகிறேன். அடுத்த சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாடு தேர்தல் முடிவுகளும் சரி.. நாங்கள் அரசியல் கட்சி நடத்தி வரும் பீகாரிலும் சரி தேர்தல் முடிவுகள் பலருக்கும் ஆச்சரியம் தருவதாகவே இருக்கும்.
மாபெரும் வெற்றி அல்லது மிகப் பெரிய தோல்வி
நாங்கள் எத்தனை சதவிகிதம் வாக்குகளைப் பெறுவோம் எனச் சொல்ல முடியாது. ஆனால், தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை அடைவோம்.. அல்லது மாபெரும் வெற்றியைப் பெறுவோம் என்றே நிலைமை இருக்கும். இடைப்பட்ட முடிவு என எதுவும் இருக்காது.
8 சதவிகித வாக்குகளைப் பெற மாட்டார்
விஜய் 8 முதல் 10 அல்லது 12% வாக்குகளைப் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை.. எங்கள் ஜன் சுராஜ் கட்சிக்கும் அதே நிலை தான். இரண்டே முடிவுகள் தான் இருக்கு.. ஒன்று மக்கள் எங்களை மாற்றுச் சக்தியாக ஏற்றுப் பெரிய வெற்றியைத் தருவார்கள்.. அல்லது நம்பிக்கை வரும் வரை அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மக்கள் பணி செய்யச் சொல்வார்கள். இதற்கு நடுவே இடைப்பட்ட முடிவு என எதுவும் இருக்காது. இந்த இரண்டிற்கு மட்டுமே வாய்ப்பு என்பதால் விஜய் தனித்துப் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம்" என்றார்.
அதாவது அடுத்து நடக்கும் சட்டசபைத் தேர்தலில் இரண்டு முடிவுகளுக்கு வாய்ப்பு இருக்கிறதாம். ஒன்று மக்கள் இவர்களை (தமிழகத்தில் விஜய், பீகாரில் பிரசாந்த் கிஷோர்) மாற்றுச் சக்தியாக ஏற்று மாபெரும் வெற்றியைத் தருவார்கள் அல்லது தேர்தலில் படுதோல்வி அடையலாம்.. ஆனால், அடுத்த தேர்தல் வரை தொடர்ந்து களத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும். இந்த இரு முடிவுகள் மட்டுமே இருக்கும். 10% வரை வாக்கு பெற்று கணிசமான தொகுதிகளை வெல்வது என்பது நடக்கவே நடக்காது என்பதே பிரசாந்த் கிஷோரின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications