இப்படியுமா பிள்ளைகள் இருப்பாங்க.. சென்னை வியாசர்பாடியில் வயதான தாய் எடுத்த விபரீத முடிவு
சென்னை: சென்னை வியாசர்பாடியில் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக் கூடாது என வயதான தாய் தீக்குளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை வியாசர்பாடி எஸ் ஏ காலனி முதல் தெருவில் வசித்து வருபவர் வசந்தா. வயது 72. கணவர் இறந்த பிறகு 15 ஆண்டுகளாக வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு மூன்று பிள்ளைகள் ஒரு மகள் இருக்கின்றனர். வசந்தாவின் மகன்கள் மற்றும் மகள் திருமணம் ஆன பிறகு குடும்பத்துடன் தனியாக சென்று விட்டனர்.
ஃபேன் இல்லை.. வசதி இல்லை.. எஸ்.பி. சட்டையை பிடித்து தள்ளி விட்ட பாஜகவினர்.. திருத்தணியில் ஷாக்!
தனிமையில் வசந்தா அம்மா
வசந்தாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவரை தனியாக விட்டுச் சென்றுள்ளனர். கணவனை இழந்த பிறகு 15 ஆண்டுகளாக தனியாகவே வாழ்ந்து வந்திருக்கிறார். வயசான காலத்திலும் தனியாக வாழ்ந்து வந்த வசந்தா ஆதரவில்லாமல் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
ஆதரவு இல்லை
வாடகைக்கு இருக்கும் வீட்டிலிருந்து 7 வீடு தள்ளித்தான் மகன்களும் மகள்களும் வசித்து வந்தாலும், ஆதரவு இல்லாமல் வசித்து வந்ததால், மனவேதனையுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு
இந்நிலையில் பிள்ளைகளுக்கு இனி பாரமாக இருக்கக் கூடாது என இன்று காலை தனக்குத் தானே மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக பார்த்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வியாசர்பாடியில் சோகம்
60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் உயிருக்குப் போராடும் நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான காலத்தில் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருக்ககூடாது என தனக்கு தானே மூதாட்டி தீ வைத்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.