எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் தனிச் செயலர்.. இப்போது புதிய தலைமைச் செயலாளர்.. தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, சாய்குமாரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. அதேபோல் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைமைச் செயலாளர் சாய் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டுள்ளார். அந்த இடத்தில் ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை உடனே அமல்படுத்தி பணியில் சேர்ந்தது குறித்து மாலைக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர் சாய் குமார். இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலராகவும் இருந்தவர். இதனால் திமுகவினர் இடையே இது பேசுபொருளாகி இருக்கிறது. ஏற்கனவே ஏப்ரல் 2ஆம் தேதி தமிழக காவல்துறையினர் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
அதேபோல் தாம்பரம், மதுரை மாநகரக் காவல் ஆணையர்கள், மேற்கு மண்டல ஐஜி ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அரசு அதிகாரிகள் திமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாக விமர்சித்து வந்த நிலையில், தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications