ராமதாஸுக்கு பலத்த அடி.. அன்புமணிக்கு தான் பாமக, மாம்பழம்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தேர்தல் ஆணையம்!
சென்னை: அன்புமணி ராமதாஸ் நடத்திய பொதுக்குழுவை ஏற்று தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியுள்ளதாகவும், அவரிடம் தான் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவை உள்ளதாகக் கூறியிருக்கிறார் பாமகவின் செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் பாலு. மேலும், அன்புமணியைத் தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே பாமக சார்பில் போட்டியிட முடியும் எனக் கூறியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அன்புமணியைக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், நானே தலைவராகத் தொடர்வேன் எனக் கூறி அதிர வைத்தார் ராமதாஸ். வன்னியர் சங்க மாநாட்டிலும் ராமதாஸ் பேசிய கருத்துகள் பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தின.
கட்சியின் எதிர்காலம் கருதி அன்புமணியைத் தலைவராக நியமனம் செய்த ராமதாஸ், அதற்குப் பிறகு தனக்கான முக்கியத்துவம் குறைவதாகவும், அன்புமணி தனித்துச் செயல்படுவதாக எண்ணி அவரை இலக்கு செய்வதாக அன்புமணி ஆதரவாளர்கள் கூறினர்.

அன்புமணி ராமதாஸ்
தொடர்ந்து அன்புமணியின் நடைபயணம், பொதுக்குழு, மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு, கூட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டுமென ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். காவல்துறை, நீதிமன்றத்தை நாடியும் அதற்குப் பலனளிக்கவில்லை. இதற்கிடையே தனது தரப்பு பொதுக்குழுவைக் கூட்டிய அன்புமணி அடுத்த ஆண்டு வரை தானே தலைவராகத் தொடர்வேன் எனத் தீர்மானம் நிறைவேற்றி அதனைத் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு ராமதாஸ் பொதுக்குழுவைக் கூட்டி அது தொடர்பாகத் தீர்மானங்களை நிறைவேற்றி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பாமக பொதுக்குழு
அதற்குப் பிறகு பாமக விவகாரம் அப்படியே ஓய்ந்து போனது. இடையே ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாளுக்கு அன்புமணி ராமதாஸ் குடும்பத்தோடு தைலாபுரம் சென்றார். அங்கு இரு தரப்பும் கேக் ஊட்டி தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டன. அதற்குப் பிறகு ராமதாஸ் இது சாதாரண சந்திப்பு தான் எனக் கூறியிருந்தார். அதே நேரத்தில் அன்புமணி தரப்பு டெல்லிக்குக் காய் நகர்த்திய நிலையில் தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்புக்குப் பச்சைக்கொடி காட்டியதாகச் சொல்லப்பட்டது. சில நாட்களில் அது தொடர்பான அறிவிப்பு வெளிவரலாம் எனச் சொல்லப்பட்டது.
தேர்தல் ஆணையம்
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தான் உண்மையான பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது தேர்தல் ஆணையம். கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்புமணி நடத்திய பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல ராமதாஸ் தரப்பு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே அன்புமணி நடத்திய பொதுக்குழுவை தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
அன்புமணிக்கு அங்கீகாரம்
மேலும் தி.நகர் பா.ம.க அலுவலகத்தை கட்சியின் அலுவலகமாக, தலைவராக அன்புமணியையும், பொதுச் செயலாளராக வடிவேல் ராவணனையும், பொருளாளராக திலகபாமாவையும் அங்கீகரித்துள்ளது. மேலும் கட்சியின் கொடி, சின்னம், பெயர் ஆகியவற்றையும் அன்புமணி தான் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக பா.ம.க-வின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
பாமக கொடி சின்னம்
அதே நேரத்தில் நிறுவனராக ராமதாஸ் தொடரலாம் எனவும், அன்புமணி தரப்பில் இருப்பவர்கள் மட்டுமே கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். அவர் பக்கம் இருப்பவர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும் எனக் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் முடிவு தங்களுக்கு தான் சாதகமாக வரும் என ராமதாஸ் தரப்பு நம்பி இருந்த நிலையில், தற்போது அதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தின் முடிவு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து சட்ட நடவடிக்கைகள் மூலம் ராமதாஸ் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications