வேளச்சேரியில் பைக்கில் தூக்கிச் சென்றது வாக்குப் பதிவு இயந்திரம் இல்லையாம்.. தேர்தல் ஆணையம் விளக்கம்
சென்னை: வேளச்சேரி தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரம் கடத்திச் செல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.
நேற்று தமிழகத்தில் சட்டமசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து இரவு வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை பைக்கில் சிலர் கொண்டு சென்றதாக ஒரு தகவல் பரவியது.
அவர்களை திமுகவினர் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கள்ள ஓட்டு புகார்
வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றியதாகப் புகார் எழுப்பி திமுகவினர் ஒரு பக்கம் போராட்டம் நடத்தியபோது, இன்னொரு பக்கம் இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநகராட்சி ஊழியர்கள்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை திமுகவினரிடமிருந்து மீட்டு விசாரித்தனர். அதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. ஏன் அவர்கள் அதை எடுத்துச் சென்றார்கள் என்ற கேள்விகள் எழுந்தன.
மறுவாக்குப் பதிவு
இந்த நிலையில், வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா வலியுறுத்தினார்.
பைக்கில் தூக்கிச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த தகவலை தேர்தல் அதிகாரி இன்று வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் விளக்கம்
பைக்கில் எடுத்துச் செல்லப்பட்டது தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் கிடையாது. பழுதான 2 விவி பேட் இயந்திரங்களும், 2 மாற்று இயந்திரங்களும்தான் எடுத்துச் செல்லப்பட்டது என்று, சென்னை தேர்தல் அதிகாரி பிரகாஷுக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.