வேகமெடுக்கும் உள்ளாட்சி தேர்தல் பணிகள்.. மாநில தேர்தல் ஆணையர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இன்னும் ஒரு சில நாட்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த ஆலோசனை நடந்தது.
தமிழகத்தில் 2016ம் ஆணடு நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு பிரச்சனை தொடர்பான வழக்கால் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு வார்டு மறுவரையறை செய்தல், மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்த காரணத்தால் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடுவது தள்ளிப்போய்க்கொண்டு இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இது தொடர்பாக அண்மையில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், இன்னும் 15 நாளில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
இந்த சூழலில் இன்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
மின்னணு வாக்கு எந்திரம், வாக்குச்சாவடி மையம், அதிகாரிகளை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடந்தது. தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகும் நிலையில் தேர்தல் ஆணையமும் சுறுசுறுப்பாக மாறியுள்ளது. இதன் காரணமாக மாநில தேர்தல் ஆணைம் விரைவில் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications