நீங்க வந்தா மட்டும் போதும்.. விசிலை அமுக்க தாமரை போடும் கணக்கு! ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா?
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இந்த நிலையில், அதிமுக-பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் தவெகவை இணைக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த கூட்டணியில் தவெகவுக்கு 51 தொகுதிகள் வரை வழங்கப்படும் என்ற ஆஃபரை பாஜக கொடுத்துள்ளதாகவும், துணைமுதல்வர், எதிர்க் கட்சித் தலைவர் பதவி ஆகிய ஆஃபர்களும் முன் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் அடிக்கடி மாறி வருகிறது. தமிழக அரசியலில் புதிய கட்சியாக களமிறங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் யாருடன் இணைந்து தேர்தலை சந்திக்கப் போகிறது என்பது அரசியல் களத்தில் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது.
குறிப்பாக விஜய் தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணியில் சேர்வாரா என்பது குறித்து பல்வேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன. முன்னதாக காங்கிரஸ் கட்சி தங்களது அணிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு விஜய் தரப்பில் இருந்ததாக கூறப்பட்டது.

விஜய் தவெக
ஆனால் காங்கிரஸ் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர முடிவு செய்தது. இதனால் விஜய் தலைமையிலான தவெக 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்ற அரசியல் பேச்சும் அதிகரித்தது. ஆனால் தவெக தனித்துப் போட்டியிட்டால் அது எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து இறுதியில் திமுக கூட்டணிக்கே சாதகமாக மாறக்கூடும் என்ற அரசியல் கணிப்பும் முன்வைக்கப்படுகிறது. இதையும் பாஜக தரப்பு கவனத்தில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக கூட்டணி
அதனால் தவெகவை தங்களது அணிக்குள் கொண்டு வருவதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரு தரப்பினருக்கும் இடையே திரைமறைவில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், ஆனால் அவை உடன்பாடின்றி முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இறுதி முயற்சியாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
51 தொகுதிகள்
இதன் ஒரு பகுதியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெகவுக்கு முதலில் 45 தொகுதிகள் வழங்கப்படும் என பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 51 தொகுதிகளாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. துணைமுதல்வர், எதிர்க் கட்சித் தலைவர் பதவி ஆகிய ஆஃபர்களும் முன் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமித் ஷா ஆஃபர்
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனையில் சில மாவட்டச் செயலாளர்கள், புதிய கட்சி என்பதால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தேவையற்ற அழுத்தங்கள் உருவாகாமல் இருக்க கூட்டணியில் சேர்வது பாதுகாப்பான முடிவாக இருக்கலாம் என்ற கருத்தையும் முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனித்துப் போட்டி
அதே நேரத்தில், கட்சி மாநாட்டில் அறிவித்தபடி தனித்துப் போட்டியிட்டு கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை உள்ளிட்ட சில அரசியல் மற்றும் தனிப்பட்ட அழுத்தங்களும் விஜய் மீது இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
இந்நிலையில் அவர் எடுக்கும் அடுத்த கட்ட அரசியல் முடிவு தமிழக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் எந்த முடிவை எடுக்கப் போகிறது என்பது தமிழக அரசியலில் பெரிய திருப்பமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications