Election Exclusive: எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்! மாஜிக்களின் உள்குத்து பாலிடிக்ஸால் அதிருப்தி! களத்தில் மகன்?
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுகவில் வேட்பாளர் தேர்வு குறித்து முக்கியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள சில அதிரடி முடிவுகள், கட்சியின் மூத்த தலைவர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்துக் கொண்டிருந்த தனித்துவமான முடிவெடுக்கும் பாணியைப் போல, இப்போது எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தன் கையில் எடுத்துள்ளார் என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது அதிமுக தரப்பில் வெளியான தகவல்களின்படி, அதிமுகவில் பல முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்களது வாரிசுகள் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கிக் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் பெரிய பட்டியலுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அங்கு அவர்கள் எதிர்பார்த்த பதில்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. உங்கள் தொகுதி வேலையை மட்டும் பாருங்கள். முதலில் தேர்தலில் வெற்றி பெற்று வாருங்கள். மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி நேரடியாக பதில் அளித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2026 சட்டசபை தேர்தல்
இந்த பதில் பல முன்னாள் அமைச்சர்களின் அரசியல் திட்டங்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வில் எந்தவிதமான தவறும் நடக்கக் கூடாது என்ற நோக்கில், இந்த முறை எடப்பாடி பழனிசாமி ஒரு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார். பொதுவாக மாவட்ட நிர்வாகிகள் தரும் தகவல்களை அடிப்படையாக வைத்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும். ஆனால் இந்த முறை அதற்கு கூடுதலாக மகன் தலைமையில் ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு ரகசிய குழுவை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
இந்த குழு மாநிலம் முழுவதும் தொகுதிவாரியாக ஆய்வு செய்து, யாருக்கு மக்கள் ஆதரவு உள்ளது, யாருக்கு நல்ல பெயர் இருக்கிறது என்பதை பற்றிய விரிவான அறிக்கையை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையும், எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட மதிப்பீடும் பொருந்தினால் மட்டுமே வேட்பாளர் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம்
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் சுமார் 80 சதவீதம் வரை புதுமுகங்களை களமிறக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் பணபலத்தை நம்பி வருபவர்களை விட, மக்கள் தொடர்பு அதிகம் உள்ள இளைஞர்கள், படித்தவர்கள் மற்றும் சமூகத்தில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், கட்சி சிக்கலில் இருந்த காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லாமல் எடப்பாடி பழனிசாமியுடன் இருந்த விசுவாசிகளுக்கும் இந்த முறை அதிக வாய்ப்பு கிடைக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாஸ்டர் ப்ளான்
மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைக்கும் நபர்களே வேட்பாளர்கள் என்ற பழைய நடைமுறையையும் எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர்கள் தங்கள் தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், மற்ற தொகுதிகளில் தலையிட வேண்டாம் என்று கட்சி தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறம் கட்சியில் ஒழுங்கை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் சீட் கிடைக்காதவர்களின் அதிருப்தி தேர்தலுக்கு முன் பிரச்சனையாக மாறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications