Election Exclusive:உங்களை நம்பி கட்சி ஆரம்பிச்சதுக்கு..பனையூருக்கு ரிட்டர்ன் ஆகாத விருப்பமனு! லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட விருப்ப மனுக்களை வாங்கியவர்களில் பெரும்பாலானோர் அவற்றை பூர்த்தி செய்து ஒப்படைக்காததால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருப்பமனுவை வாங்க போட்டி போட்டுக் கொண்டு ஆயிரக்கணக்கில் பனையூரில் குவிந்தவர்கள், பணத்தைக் கட்டி அதனை திரும்பி அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய்க்கு சென்ற நிலையில், மாநில நிர்வாகிகளை லெஃப்ட் ரைட் வாங்கி விட்டாராம்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு சென்னை பனையூர் அலுவலகத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. முதல் நாளிலேயே மனுக்கள் அதிக அளவில் விற்றுத் தீர்ந்ததாக கட்சி தரப்பில் கூறப்பட்டது.
மனு பெற வந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அலுவலகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, நேரில் வராமல் ஆன்லைன் முறையிலும் மனு பெறலாம் என கட்சி அறிவித்தது. பொதுவாக அரசியல் கட்சிகளில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களுக்கே விருப்ப மனு வழங்குவது வழக்கம்.

தமிழக வெற்றிக் கழகம்
மேலும், மனு கட்டணம் உயர்ந்ததாக நிர்ணயிக்கப்படும். ஆனால் தவெகவில் குறைந்த தொகையான 100 ரூபாய் செலுத்தி மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டதால் பலர் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றனர். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட மனுவுடன் பொதுப் பிரிவினர் 10,000 ரூபாய் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 5,000 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. கட்சி தரப்பில் கிடைத்த தகவல்படி, நேரில் சுமார் 10,000 பேர் மனு பெற்றதாகவும், ஆன்லைன் மூலம் சுமார் 40,000 பேர் மனுக்களை பதிவிறக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
தவெக விருப்ப மனு
மொத்தமாக 50,000க்கும் மேற்பட்டோர் மனுக்களை பெற்றிருந்தாலும், அவற்றில் 5,000க்கும் குறைவான மனுக்களே பூர்த்தி செய்து கட்சி தலைமையிடம் திரும்ப வந்துள்ளன. திரும்ப வந்த மனுக்களில் கூட கட்டணத் தொகைக்கான வரைவோலை இணைக்கப்படாதவை பல உள்ளதாக கூறப்படுகிறது. மனு ஒப்படைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், சில தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் தாங்களே வேட்பாளர்கள் என கூறி செயல்படுகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கட்சி தலைமையிலிருந்து எந்தத் தெளிவான விளக்கமும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
பனையூர் அலுவலகம்
இதனால், தேவையற்ற செலவு செய்வதற்குப் பதிலாக மனு செயல்முறையிலிருந்து விலகியவர்கள் பலர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையை முன்னிட்டு, விருப்ப மனு சமர்ப்பிக்கும் கால அவகாசம் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மனு வாங்கிய நிர்வாகிகள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் மனுக்களை உடனடியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் கோபம்
கட்சி சார்பில் அதிக எண்ணிக்கையில் மனுக்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை திரும்ப வராதது கட்சியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் 40,000 ஆன்லைன் விண்ணப்பங்களும் 10,000 ஆஃப்லைன் விண்ணப்பங்களும் பெறப்பட்டாலும் அவற்றில் 5000 கூட திரும்ப வராதது விஜயின் கவனத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் கோபம் அடைந்த விஜய் மாநில நிர்வாகிகளை கடுமையாக கடிந்து கொண்டதோடு, மாவட்ட செயலாளர் இடம் சொல்லி மனுக்களை பெற்றவர்களை திரும்ப ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications