புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் காரை ‘சுத்து’ போட்ட தேர்தல் பறக்கும் படையினர்.. மதுரை அருகே பரபர
மதுரை: திருச்சுழி அருகே மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் காரை தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக இருக்கும் ரங்கசாமி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்க எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதனால் இக்கூட்டணியில் இருந்து விலகும் நிலை அவருடைய என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் உடன் மீண்டும் கூட்டணி அமைத்து பாஜக தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை நடத்தியது. இதில் என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 14 இடங்களில் பாஜக-10, அதிமுக-2, லட்சிய ஜனநாயக கட்சி-2 என பாஜக திட்டமிட்டது. கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சியை சேர்க்கக்கூடாது என ரங்கசாமி வலியுறுத்தினார்.
லட்சிய ஜனநாயக கட்சியை சேர்த்தால் நாங்கள் வெளியேறுவோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சி கட்சி சேர்க்கப்படாது, அதற்கு பதிலாக அக்கட்சியை சேர்ந்த இருவருக்கு சீட் வழங்கப்படும். அவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டது. இதையும் ரங்கசாமி ஏற்கவில்லை.
இந்நிலையில் டெல்லியில் பாஜக தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். இச்சூழலில் ரங்கசாமியின் கோரிக்கையை மத்திய பாஜக ஏற்பது தொடர்பாக விவாதித்து உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசியத் தலைவர் நிதின் விபின் ஆகியோர் உடன் புதுச்சேரி தலைவர்கள் பேசினர்.
இதற்கிடையில் அரசியல் முக்கிய முடிவு எடுக்கும் போதெல்லாம் தன்னுடைய குரு அப்பா பைத்தியம் சுவாமிகளை வணங்கி ஆன்மிக உத்தரவைப் பெற்று முடிவு எடுப்பது வழக்கம். அதற்காக முதல்வர் ரங்கசாமி சேலத்துக்கு சென்றார். அங்கு பூஜை செய்து வழிபட்டார். அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற அவர், அங்கிருந்து திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றார்.
இச்சூழலில் டெல்லியில் முகாமிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம், பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மத்திய அமைச்சரும் தேர்தல் ஒருங்கிணைப்பாளரான மன்சுக் மாண்டவியாவுடன் தனி விமானத்தில் இன்று புதுச்சேரி திரும்புகின்றனர்.
நேற்று இரவு நடந்த பாஜக நாடாளுமன்ற தேர்தல் குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். ரங்கசாமிக்கு ஒதுக்கிய 16 தொகுதிகளை விடுத்து பாஜக போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக இன்று வெளியிடும் என தெரிகிறது. ரங்கசாமியை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சந்திப்பார். அதன்பிறகு மேலிடத்தில் பேசி கூட்டணி தொடர்பாக இறுதி முடிவை பாஜக தலைமை அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் காரை, மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் திருச்சுழி அவியூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் காரை தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications