Jana Nayagan: அண்ணா பல்கலைக்கழக ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகன் படம் பார்த்த சிசிடிவி ஊழியர் கைது
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக பார்த்ததாக தேர்தல் கண்காணிப்பு சிசிடிவி அறை ஊழியர் யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகள் வரும் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

வாக்கு பதிவு நடந்து முடிந்ததும் வாக்கு பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் அறையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 62 மையங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாத்து வருகிறார்கள்.
மேலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிசிடிவி கேமராக்களை தேர்தல் கண்காணிப்பு ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஸ்ட்ராங் ரூம் உள்ளது. இங்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி அறையில் ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக ஊழியர் யுவராஜ் பார்த்ததாக தெரிகிறது.
அந்த படத்தை அவர் பார்க்கும் வகையில் ஒரு போட்டோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவரை கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு ஜனநாயகன் படத்தின் ஒரு சில காட்சிகள் வெளியான நிலையில் அடுத்த நாளே முழு படமும் எச்டி பிரிண்ட்டில் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இணையதளத்தில் படத்தை யாருக்கும் பகிர கூடாது, பார்க்கக் கூடாது என காவல் துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது.
தயாரிப்பு நிறுவனத்திற்கும் படம் வெளியாகாதது, இணையத்தில் லீக் ஆனது என அடிமேல் அடியாக இருந்தது. படத்தின் பிரிண்ட் கிடைத்தாலும் யாரும் பகிர வேண்டாம் என தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டது. இந்த சம்பவத்திற்கு கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டோர் கண்டனமும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் படம் எடிட்டிங் துறையில் இருந்து லீக்கானது தெரியவந்தது. இதையடுத்து படக்குழு சைபர் க்ரைமில் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், உதவி படத் தொகுப்பாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிரதீப் ராகவை தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைப்பதாக அச்சங்கம் அறிவித்தது.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் உமாசங்கர்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "படத்தொகுப்பாளர் பிரதீப் E. ராகவ், தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் தொடர்ந்து ஜனநாயகன் உட்பட தான் பணியாற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராக பயன்படுத்துவது சங்க செயற்குழு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது.
மேலும் "ஜனநாயகன்" திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் E ராகவ் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் திரைப்படத் துறையே செயலிழந்து போகும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் கடமை தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்திற்கு உள்ளது.
திரைத்துறையின் பாதுகாப்பு மற்றும் சங்கத்தின் மாண்பைக் காப்பாற்ற வேண்டி 17.04.2026 அன்று நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி முன்னிலையில் படத்தொகுப்பாளர்கள் கலந்தாலோசிக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு பிரதீப் ராகவை தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கம் 'இடை நீக்கம்" செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது.
இந்த இடை நீக்க காலத்தில் சங்கம் பிரதீப் E. ராகவுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்காது எனவும், மேலும் சகோதர சங்கங்கள் இந்த அறிவிப்புக்கு முழு ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications