100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? வாடகை வீட்டில் வசிப்போருக்கு வந்த ‘ஷாக்’.. மின் வாரியம் விளக்கம்!
சென்னை: வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சார மானியம் ரத்து என பரவி வரும் தகவல் வதந்தி என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் புதிய முடிவு மேற்கொள்ளப்பட இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. அதன்படி ஒரே ஆதார் எண்ணில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை மெர்ஜ் செய்து, அதில் ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகின.

100 யூனிட் இலவச மின்சாரம்: இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள், குடியிருப்புகளை வாடகைக்கு விட்டிருந்தால், மின் இணைப்பு ஒரே பெயரில் இருக்கும் பட்சத்தில், அனைத்து இணைப்புகளுக்கும் சேர்த்து மொத்தமாகவே 100 யூனிட் மின்சாரம் மட்டுமே இலவசம் என்றும், அதற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தகவல் வெளியானது.
தற்போதைய சூழலில், வாடகை வீட்டில் வசித்து வரும் நபர்கள், தாங்கள் பயன்படுத்தும் மின் இணைப்பில் 100 யூனிட் வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், புதிய முறைப்படி, வீட்டு உரிமையாளரின் ஒரு மின் இணைப்பை தவிர மற்றவர்களுக்கு மானியம் கிடைக்காது என்பதால் வாடகை வீடுகளில் வசிப்போர் அதிகமான மின் கட்டணம் செலுத்த வேண்டி வரும் எனக் கூறப்பட்டது.
சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு ஆகியவை ஏற்கனவே மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் தற்போது 100 யூனிட் இலவச மின்சார திட்டத்திலும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து, வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு மிகுந்த சிரமங்களை தமிழக ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.
மின் வாரியம் விளக்கம்: இந்நிலையில், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும், வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியம் வழங்கப்படும் என தெளிவுபடுத்தியுள்ளது.
வாடகைக்கு விட்டால்: வீட்டின் உரிமையாளருக்கு மற்றொரு இணைப்பிற்கு மானியம் ரத்து செய்யப்படும். வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும். வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து அதற்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறலாம் என்றும், அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் ரத்து என்பது தவறானது என மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஆதார் இணைப்பு இதற்காகத்தானா?: கடந்த ஆண்டு, தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மின்வாரிய இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்களை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், 100 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட மானியங்களைப் பெற ஆதார் மின் இணைப்பு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டு அனைத்து நுகர்வோர்களிடமிருந்து ஆதார் எண் பெறப்பட்டது.
அப்போதே 100 யூனிட் இலவசம் மின்சார திட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளப்படுகிறது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் நுகர்வோர்களின் தகவல் சேகரிப்புக்காக மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படுகிறது எனக் கூறி அந்த குற்றச்சாட்டை மறுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications