சென்னையில் சினிமா தயாரிப்பாளரின் நகைக்கடையில் ரூ.25 லட்சம் கொள்ளை.. ஊழியர் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னையில் தமிழ் சினிமா பட தயாரிப்பாளர் நடத்தி வரும் நகைக்கடை ஒன்றில் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் என ரூ.25 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் அங்கு பணியாற்றிய ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் இருந்து கொள்ளையடித்த 20 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.4.80 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை கோ-ஆப்ரேட்டிவ் காலனி பகுதியை சேர்ந்த 43 வயதாகும் தினேஷ் என்பவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார் இவர் ஆழ்வார்பேட்டை செனடாப் சாலை இரண்டாவது சந்து பகுதியில் வெள்ளிப் பொருட்கள் விற்பனை செய்யும் நகை கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.

கடந்த நவம்பர் 9-ந்தேதி அன்று இவருடைய கடையின் பூட்டை உடைத்து, பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்து 20 கிலோ வெள்ளி நகைகள், பொருட்கள், ரூ.5 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது. வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது..
தனது நகைக்கடையில் நடந்த ரூ.25 லட்சம் கொள்ளை சம்பவம் குறித்து தினேஷ், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் விரிவாக புகார் அளித்தார். அதில், எனது கடையில் ஊழியராக வேலை செய்த பெங்களூருவை சேர்ந்த பாபுலால் (54) என்பவர் தலைமறைவாகிவிட்டார் என்றும் அவர் மீது சந்தேகம் உள்ளது என்றும் கூறியிருக்கிறார். மேலும் போலீசார் பாபுலாலிடம் விசாரணை நடத்தி திருடப்பட்ட வெள்ளி பொருட்களையும், பணத்தையும் மீட்டுத் தர வேண்டும்' என்று தினேஷ் புகார் மனுவில் கூறியிருக்கிறார்
சினிமா தயாரிப்பாளர் தினேஷ் அளித்த புகார் மனு மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் கைவரிசை காட்டியது ஊழியர் பாபுலால் என்பது உறுதியானது. தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பாபுலால் கைது செய்யப்பட்டார். அவர் கொள்ளையடித்த 20 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.4.80 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது..
சென்னை நகை திருட்டு சம்பவம்: திருவல்லிக்கேணி பெரிய தெருவை சேர்ந்த 50 வயதாகும் முனிருதின் என்பவர் திருவல்லிக்கேணி, பாராதி சாலையில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் 12ம் தேதி வாடிக்கையாளர் ஒருவர், தனது பழைய நகைகளான 5 கிராம் கொண்ட 3 தங்க நாணயங்கள் மற்றும் 1 ஜோடி கம்மலை கொடுத்து, புதிய நகைகளை வாங்கி சென்றுள்ளார்.
பழைய நகைகளை கடையின் உரிமையாளர் முனிருதின் லாக்கரில் வைத்திருந்திருக்கிறார். இந்த நகை மாயமானது. மேலும் கடையில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் பகுதியை சேர்ந்த 25 வயதாகும் முகமது பாசித் என்பவரும் திடீரென வேலைக்கு வரவில்லை. இதனால் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, லாக்கரில் உள்ள பழைய நகைகளை முகமது பாசித் திருடியது தெரியவந்தது, உடனே கடையின் உரிமையாளர் முனிருதின் சம்பவம் குறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், தலைமறைவாக இருந்த முகமது பாசித்தை அண்மையில் ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் மதிப்புள்ள 3 தங்க நாணயங்கள், 1 ஜோடி கம்மல் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications