சென்னையில் 2 புகழ்பெற்ற கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு. ஒரே நாளில் இந்து அறநிலையத்துறை தரமான சம்பவம்
சென்னை : சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சாமி கோவிலுக்கு சொந்தமான இடம், கோவிலின் பின்புறம் உள்ள என்.ஆர்.எஸ். சாலையில் உள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இதன்மதிப்பு 4 கோடி ரூபாய் ஆகும்.இதேபோல் சென்னை ஆலந்தூர் வேளச்சேரி சாலையில் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் நிலமும் மீட்கப்பட்டது.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சாமி கோவிலுக்கு சொந்தமான இடம், கோவிலின் பின்புறம் உள்ள என்.ஆர்.எஸ். ரோட்டில் உள்ளது. கோவில் நிலத்தை சுந்தரேசன் என்பவருக்கு வணிக பயன்பாட்டுக்காக வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அவர் மூலம், ஞானபிரகாசம் என்பவர் காலவரையறையை கடந்து, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கிற்கு பிறகு, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவுபடி நேற்று காலை ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கோவில் நிலத்தை மீட்கும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி கமிஷனர் சிவகுமார், தனி தாசில்தார் திருவேங்கடம், கோவில் உதவி கமிஷனர் நற்சோணை, கோவில் பணியாளர்கள் சந்தானம், விஜயகுமார் ஆகியோர் ஆக்கிரமிப்பு கட்டிடம் முழுவதும், தகர செட் அடிக்கப்பட்டு, பேனர் ஒட்டப்பட்டது. பின்னர் அந்த கட்டிடத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, திருவொற்றியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட கோவில் இடத்தின் மதிப்பு ரூ.4 கோடியாகும்.
ஆலந்தூரில் 4 கோடி நிலம் மீட்பு
சென்னையை அடுத்த ஆலந்தூர் வேளச்சேரி சாலையில் சுப்பிரமணிய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான கோவில் ஆகும்.இந்த கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே கோவில் அருகே இருந்த 3,809 சதுர அடி நிலத்தில் அப்போதை கோவில் அர்ச்சகர் தங்கி இருந்த வீடு பாழடைந்த நிலையில் இருந்து வந்தது. இந்த நிலத்தை சீரமைக்க கோவில் திருப்பணி குழு சென்றபோது அந்த இடத்தை சிலர் சொந்தம் கொண்டாட முயற்சித்து வருவது தெரியவந்தது.
இதுபற்றி கோவில் திருப்பணி குழுவினர் பரங்கிமலை போலீசில் புகார் செய்தனர். பின்னர் போலீஸ் உதவியுடன் பாழடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றினார். மேலும் அங்கு, இந்த நிலம் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications