'இனி கோயில் நிலங்களை ஆக்கிரமித்தால்.. உடனடியாக கைது தான்..' அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்த மசோதா
சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏதுவாக, அவர்களை ஜாமீன் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்ய வழிவகை செய்யும் புதிய மசோதா தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக சேகர்பாபு உள்ளார். இவர் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பொறுப்பேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் வகையில் புதியதொரு சட்ட மசோதாவை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்,

கோயில் நில ஆக்கிரமிப்பு
தமிழ்நாட்டில் கோயில் ஆக்கிரமிப்பு என்பது நீண்ட காலமாக இருக்கும் ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் அரசு எச்சரித்தும் அதை காலி செய்ய மறுக்கின்றனர். பல ஆண்டுகளாகக் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கும் சிலர், அரசு தங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களைத் தண்டிக்கச் சரியான சட்டம் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

பழைய சட்டம்
தற்போது கோயில் ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் 1959 இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் தான் பதிவு செய்யப்படுகிறது. இந்தச் சட்டத்தில் ஒருவர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய முடியாது. அதாவது கோயில் ஆக்கிரமிப்பவர்கள் மீது வெறும் சிவில் வழக்கு மட்டுமே பதிவு செய்யப்படுவதாலேயே கோயில் ஆக்கிரமிப்புகள் தொடர்வதாகவும் சட்டத்தை கடுமையாக்கினால் கோயில் ஆக்கிரமிப்பு குறையும் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.

சட்டத் திருத்தம்
இதையடுத்து கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களைக் கைது செய்ய வழிவகை செய்யும் புதிய மசோதா தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர்பாபு இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மூலம் 1959 இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படுகிறது. சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்து வருவதால் இந்தச் சட்டத்திருத்தங்கள் செய்யப்படுவதாகவும் இதன் மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ஜாமீனில் வெளிவராத பிரிவில் கைது
இனி புதிய சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறையின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கடும் குற்றங்களைச் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள். ஏற்கனவே இருந்த சட்டத்தில் கைது செய்ய எந்த வழியும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்பவர்களை ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் சேகர்பாபு
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்களை மீட்பதில் கூடுதலாகக் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களில் மட்டும் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் எனத் தமிழ்நாடு முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான ரூ 520 கோடி மதிப்பிலான 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். மேலும், மீட்கப்படும் கோயில் நிலங்களில் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். இதற்குப் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications