Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரீமிலேயர் வரம்புக்கு முற்றுப்புள்ளி.. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன.. கொண்டாடும் எஸ்டிபிஐ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் 'கிரீமி லேயர்' வரம்பைத் தீர்மானிப்பதில் நிலவி வந்த குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமூக நீதியை நிலைநாட்டியுள்ள உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வரவேற்கிறேன். குறிப்பாக, வெறும் சம்பள வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கிரீமிலேயர் முறையைத் தீர்மானிக்கக் கூடாது என்ற நீதிமன்றத்தின் தெளிவுரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த வெற்றி என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.

மண்டல கமிஷன் பரிந்துரை அடிப்படையில், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் மத்திய அரசுக்கும், இந்திரா சஹானிக்கும் இடையிலான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. இருப்பினும், அப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்கள், சமூகரீதியாக முன்னேறியவர்கள் ஆகியோர் இடஒதுக்கீடு சலுகையில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

End to the Creamy Layer Limit SDPI Welcomes Supreme Court Verdict Upholding Social Justice


'கிரீமிலேயர்'

அதுபோன்று வசதியானவர்களை (கிரீமிலேயர்) அடையாளம் காண 1993-ம் ஆண்டு விதிகள் வகுக்கப்பட்டன. பெற்றோரது ஆண்டு வருமானம் அடிப்படையில், 'கிரீமிலேயர்' அடையாளம் காணப்பட்டார்கள். தற்போது, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்கள் 'கிரீமிலேயர்' என்று கருதப்படுகிறார்கள். அவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கிடையாது. அரசியலமைப்பு சட்ட பதவி வகிப்பவர்கள், உயர் அரசு பதவியில் இருப்போர், ராணுவத்தில் உயர் பதவி வகிப்போர், கணிசமான சொத்து, வர்த்தக வருமானம் கொண்டவர்கள் ஆகியோரின் பிள்ளைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை.

நீதிபதிகள் தீர்ப்பு

இந்நிலையில், 'கிரீமிலேயர்' தொடர்பாக நிலுவையில் இருந்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் கூறும் போது, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரில் யார் கிரீமிலேயர், யார் கிரீமிலேயர் அல்லாதவர் என்பதை பெற்றோரின் வருமானத்தை மட்டும் அடிப்படையாக வைத்து முடிவு செய்ய முடியாது. அவர்களது பதவி, அந்தஸ்து ஆகியவற்றை பார்க்காமல், வருமானத்தை மட்டும் வைத்து கிரீமிலேயரை முடிவு செய்வது, சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல" இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

எஸ்டிபிஐ வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் 'கிரீமி லேயர்' வரம்பைத் தீர்மானிப்பதில் நிலவி வந்த குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமூக நீதியை நிலைநாட்டியுள்ள உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வரவேற்கிறேன். குறிப்பாக, வெறும் சம்பள வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கிரீமிலேயர் முறையைத் தீர்மானிக்கக் கூடாது என்ற நீதிமன்றத்தின் தெளிவுரை, இடஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்கப் போராடும் கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

சிவில் சர்வீஸ் தேர்வு

ஒன்றிய அரசு 2004-ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு விளக்கக் கடிதத்தின் மூலம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றும் பெற்றோரின் வருமானத்தை இயந்திரத்தனமாகக் கணக்கிட்டு, தகுதியான பல மாணவர்களுக்கு இடஒதுக்கீடு பலன்களை மறுத்து வந்தது. இது மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கும், இந்திரா சாவ்னி வழக்கின் அடிப்படை நோக்கத்திற்கும் எதிரானது என்பதை உச்ச நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது. அதிகாரத்துவத்தின் இத்தகைய தவறான அணுகுமுறையால், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் பல தகுதியான ஓபிசி மாணவர்கள் பணி நியமனம் மறுக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

சமூக நீதி

சென்னை, டெல்லி மற்றும் கேரளா உயர் நீதிமன்றங்கள் வழங்கிய முற்போக்கான தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் தற்போது உறுதி செய்திருப்பது, மாநிலங்களின் சமூக நீதிப் பார்வையை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது. 1993-ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ குறிப்பாணையை மீறி, ஒரு விளக்கக் கடிதத்தின் மூலம் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என்று நீதிமன்றம் கூறியிருப்பது, நிர்வாகத் தன்னிச்சைப் போக்கிற்கு விடப்பட்ட பலத்த எச்சரிக்கையாகும். வருமானத்தைக் காட்டி இடஒதுக்கீட்டை முடக்குவது என்பது சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யும் செயலாகும்.

மத்திய அரசுக்கு கோரிக்கை

எனவே, இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தவறாக கிரீமி லேயர் பிரிவில் சேர்க்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாகப் பணி நியமனம் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் இடஒதுக்கீட்டு முறையைச் சிதைக்கும் இத்தகைய குறுக்குவழி முறைகளைக் கைவிட்டு, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை நேர்மையுடன் வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+