நேரில் ஆஜராகும் வரை விட மாட்டோம்.. ராமச்சந்திரன் அலுவலகத்தில் மட்டும் தொடரும் அமலாக்க துறை ரெய்டு
சென்னை: மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் அலுவலகத்தில் நடக்கும் சோதனை இப்போது வரை தொடர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடந்ததாகப் பல புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை, திண்டுக்கல் எனப் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனையில் இறங்கினர்.

அன்றைய தினம் தமிழ்நாடு முழுக்க இருக்கும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடந்தது. அதன்படி தமிழ்நாட்டின் முக்கிய மணல் குவாரி அதிபராக உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டில் இறங்கினர்.
ரெய்டு: சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் இந்த ரெய்டு நடைபெற்றது. கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஊர்களில் காலை தொடங்கிய ரெய்டு பல மணி நேரம் நடந்தது. ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. மேலும், திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. புதுக்கோட்டையில் உள்ள தொழிலதிபர் சண்முகத்தின் கிராவல் குவாரியிலும் ரெய்டு நடந்தது.
தமிழகம் முழுக்க இருந்த பல மணல் குவாரிகளிலும் இந்த ரெய்டு நடைபெற்றது. திருச்சி கொள்ளிடம் ஆறு, வேலூர் பாலாற்றில் உள்ள மணல் குவாரிகளும் ரெய்டு நடந்தது. மேலும், திருவானைக்காவல், மோகனூர், பள்ளிகொண்டே என மாநிலத்தில் பல இடங்களில் ரெய்டு நடந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் கொண்டையம்பேட்டை பகுதியில் இருக்கும் ராமச்சந்திரனுக்கு சொந்தமான மணல் குவாரியில் சோதனை நடந்தது. இப்படி தமிழகம் முழுக்க பல இடங்களில் சோதனை நடந்தது.
தொடரும் ரெய்டு: இந்த ரெய்டால் மணல் குவாரிகளில் பணிகளும் நிறுத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்தது. இதற்கிடையே நேற்றைய தினமே பெரும்பாலான இடங்களில் ரெய்டு நிறைவடைந்தது. புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் மட்டுமே ரெய்டு தொடர்ந்து நடந்து வந்தது. இதற்கிடையே இப்போது அங்கும் பெரும்பாலான இடங்களில் ரெய்டு நிறைவடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் தொடர்புடைய சில இடங்களில் மட்டுமே ரெய்டு தொடர்ந்து வந்தது. இதற்கிடையே அவரது வீட்டில் நடந்த அமலாக்க துறை சோதனை நிறைவடைந்துள்ளது. ராமச்சந்திரன் பணியாளர் முருகேசனின் அலுவலகத்தில் நடைபெற்று வந்த சோதனையும் நிறைவடைந்துள்ளது. இதேபோல அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் வீட்டில் நடந்த ரெய்டும் முடிவுக்கு வந்துள்ளது.
என்ன காரணம்: நிஜாம் காலனி உள்ள ராமச்சந்திரனுக்குச் சொந்தமான அலுவலகத்தில் நடந்து வரும் ரெய்டு மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. ரெய்டு தொடங்கியது முதல் மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் நேரில் ஆஜராகவில்லை. அவர் ஆஜராகும் வரை சோதனையை முடிக்கக் கூடாது என்பதாலேயே மற்ற இடங்களில் சோதனை முடித்தாலும் கூட நிஜாம் காலனி அலுவலகத்தில் மட்டும் சோதனையைத் தொடர்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ரெய்டில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் சில இடங்களில் ரெய்டு நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications