தமிழக அரசு மருத்துவமனை அறிக்கையை அமலாக்கத்துறை நம்பாதாம்! படபடவென வெடித்த திமுக வழக்கறிஞர் சரவணன்!
சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அறிக்கையில் நம்பிக்கையில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் அதனை அஃபிடவிட்டாக தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அமலாக்கத்துறை தரப்பிடம் முறையான பதிலில்லை எனவும் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனை அறிக்கையை நம்பமுடியாது எனக் கூறினால் மாட்டிக் கொள்வோம் என்பதால் அதனை அஃபிடவிட்டாக தாக்கல் செய்ய அமலாக்கத்துறை முன்வர வில்லை என்றார்.

மேலும், அமலாக்கத்துறையை பொறுத்தவரை 41 ஏ சம்மன் கொடுக்க வேண்டிய தேவையில்லை என வாதிடப்பட்டதாகவும் செந்தில்பாலாஜியின் உடல்நிலையை கூட கருத்தில் கொள்ளாமல் மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற முறையில் அமலாக்கத்துறை வாதிட்டதாக திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
தவறான முறையில் செந்தில்பாலாஜியை கைது செய்துவிட்டோம் என்பதை அமலாக்கத்துறை இப்போது உணர்வதாகவும் இதனால் தான் தங்கள் தவறுகளை மறைக்க இப்படி செய்து கொண்டிருப்பதாகவும் சாடினார். அமைச்சர் செந்தில்பாலாஜியை சிறைக்கு அனுப்புவது குறித்த எந்த உத்தரவையும் நீதிபதி பிறப்பிக்கவில்லை என்ற தகவலையும் திமுக வழக்கறிஞர் சரவணன் வெளியிட்டார்.
தமிழக அரசு மருத்துவமனை மருத்துவர்களை நம்ப முடியாது எனக் கூறும் அமலாக்கத்துறை இ.எஸ்.ஐ.மருத்துவர்கள் கூறியதை மட்டும் எப்படி நம்புகிறது என வினவினார். மெமோ கொடுத்தோம் செந்தில்பாலாஜி வாங்கவில்லை என்பதெல்லாம் சொல்லவேண்டும் என்பதற்காக சொல்வது என்றும் அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் ஏன் சமர்பிக்கவில்லை என வழக்கறிஞர் சரவணன் வினவினார்.
செந்தில்பாலாஜி அமைச்சராக இருக்கின்ற போது அவர் என்ன நாட்டை விட்டா ஓடிவிடப் போகிறார் என செய்தியாளர்கள் சந்திப்பில் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.












Click it and Unblock the Notifications