பேங்க் மூலமாவா லஞ்சம் கொடுப்பாங்க? செந்தில் பாலாஜி வழக்கில் ஒவ்வொரு பாயிண்டுக்கும் ED கவுன்ட்டர்!
சென்னை: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கடுமையான வாதங்களை முன்வைத்த நிலையில், ஒவ்வொரு பாயிண்டுக்கும் கவுன்ட்டர் ஆர்கியூமெண்ட் செய்தது அமலாக்கத்துறை. அதனை விரிவாக பார்க்கலாம்..
சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் மூன்று மாதங்களாக காவலில் உள்ள செந்தில் பாலாஜி தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விசாரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வரும் 20ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தார். முன்னதாக, இந்த வழக்கில் புதிய ஆவணங்களை தற்போது தாக்கல் செய்துள்ளதால் எங்களது தரப்பு வாதத்தை செவ்வாக்கிழமை தொடங்கலாமா என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.
அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அமலாக்கத்துறை வாதங்களைத் தொடங்கியது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வாதங்களை வைத்தனர். அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் பதில் வாதம் வைத்தார். கபில் சிபலின் ஒவ்வொரு பாயிண்டுக்கும் அமலாக்கத்துறை கவுன்ட்டர் கொடுத்தது.
கபில் சிபல்: செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது. சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை: சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.
கபில் சிபல்: சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை. வேலைக்காக பணம் கொடுத்தாக கூறும் யாரும் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் கொடுக்கவில்லை. வங்கி மூலமும் வழங்கவில்லை. அவரது உதவியாளர்கள் என கூறப்படும் கார்த்திகேயன், சண்முகம் ஆகிய இருவரிடம் தான் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் சாட்சியாக கூட சேர்க்கப்படவில்லை.
அமலாக்கத்துறை: இந்த முறைகேடு இடைத்தாரர்கள் மூலம் நடந்துள்ளது. பணம் கொடுத்த சிலருக்கு வேலை கிடைத்துள்ளது. சிலருக்கு வேலை கிடைக்கவில்லை. வேலை வேண்டும் எனக் கோரி லஞ்சமாக பணம் கொடுப்பவர்கள் வங்கி மூலம் பணம் கொடுக்கமாட்டார்கள்.
கபில் சிபல்: குற்றச்சாட்டு எழுந்த பிறகு இந்த ஒன்பது ஆண்டுகளில் வருமான வரியை தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி. சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டிருக்கும்?
அமலாக்கத்துறை: வருமான வரி கணக்கை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டதாலேயே அது சட்டப்பூர்வமான பணம் ஆகாது என்ற தீர்ப்புகள் உள்ளன. வருமான வரி கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தவறு செய்யவில்லை என்றில்லை. விசாரணையில் தான் அது தெரியவரும்.
கபில் சிபல்: ஒருவர் மீது வழக்கு பதிவு செயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா? இல்லையா என்பதை விசாரணை அமைப்பு தான் நிரூபிக்க வேண்டும்.
அமலாக்கத்துறை: குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தான், தன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி தாம் தவறு செய்யவில்லை நிரூபிக்க வேண்டும்.
கபில் சிபல்: வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் உள்ள நிலையில் செந்தில் பாலாஜியால் சாட்சிகளை கலைக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கும் நிலையில் எங்கும் தப்பிச் செல்ல இயலாது
அமலாக்கத்துறை: அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கோர முடியாது. IPC வழக்குகளுக்கு வேண்டுமானால் அது பொருந்தும். அமலாக்கத்துறை சட்டம் வேறு. அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக இருக்கிறார். சமூகத்தில் சக்தி வாய்ந்த நபராக உள்ளார். எனவே சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமீன் வழங்க கூடாது.
கபில் சிபல்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது இருக்கும் உடல்நிலைப்படி 30 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்கவே முடியாது. எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர் கொள்வார்.
அமலாக்கத்துறை: ஜாமீன் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களும் உள்ளனர்.
கபில் சிபல்: செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை 6 நாட்கள் சட்ட விரோதமாக அமலாக்கத்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
அமலாக்கத்துறை: செந்தில் பாலாஜியின் எலக்ட்ரானிக் பொருட்களை சட்ட விரோதமாக அமலாக்கத்துறை வைத்திருந்ததாக கூறுவது தவறு. ஆவணங்களை சேகரிக்கும் நோக்கிலேயே எலக்ட்ரானிக் பொருட்களை அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை தரப்பில் பரபரவென வாதங்களையும் பதில் வாதங்களையும் வைத்தனர். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications