குறைகிறது பொறியியல் படிப்புக்கான கட் ஆப்.. வழக்கம் போல் இசிஇ, சிஎஸ் பிரிவுகளில் சேர ஆர்வம்!
சென்னை: நடப்பாண்டில் பொறியியல் மற்றும் இதர படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒப்பிடும் போது இந்த ஆண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக கூறிய அஸ்வின், கட் ஆஃப் மதிப்பெண்கள் 1 முதல் 3 மதிப்பெண்கள் வரை குறையும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரங்கேறிய அரசியல் சூழலால் இம்முறை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிக கவனம் பெறவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த சில நாட்களிலேயே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியது. இந்த முறை 12ஆம் வகுப்பு மாணவர்களில் பெரும்பாலானோரின் தேர்வுகள் பொறியியலாகவே இருக்கிறது.

பொறியியல் முடித்தவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு அதிகம் இருப்பதால், மாணவர்கள் பலரும் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இதுதொடர்பாக கல்வியாளர் அஸ்வின் பேசுகையில், கடந்த ஆண்டு 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களுக்கு கிடைத்த முதன்மை கல்லூரிகள் மற்றும் பொறியியல் பாடப்பிரிவுகள் இம்முறை 199 கட் ஆப்க்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
ஏனென்றால் இந்த கல்வியாண்டில் கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக கணிதத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், பொறியியல் மட்டுமல்லாமல் மற்ற படிப்புகளுக்கும் கட் ஆப் 1.5 முதல் 2 மதிப்பெண்கள் வரை குறையக்கூடும்.
கால்நடை அறிவியல், மீன்வள அறிவியல், விவசாயப் படிப்புகளுக்கும் கட் ஆப் குறையும். நடப்பாண்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவே மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது. ஆனால் செமி கண்டக்டர் துறையின் வளர்ச்சி காரணமாக இசிஇ படிக்க மாணவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். பெரும்பாலான கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இசிஇ படிக்க அதே அளவிலான இடங்களே இருக்கின்றன. இதனால் கம்ப்யூட்டர் சயின்ஸை விடவும் இம்முறை இசிஇ இடங்கள் விரைவாக முடியக் கூடும். பொறியியலில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்தாலும், மாணவர்கள் ஐடி துறையில் பணியாற்றக் கூடிய அத்தியாவசிய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் முதல்நிலை கல்லூரிகளை நம்பி கவுன்சிலிங்கின் போது மாணவர்களும், பெற்றோரும் தேர்வு செய்துவிடக் கூடாது.
எந்த கல்லூரிகளில் படிக்க விரும்புகிறீர்களோ, அந்த கல்லூரியில் ஒருமுறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும். முடிந்தால் முன்னாள் மாணவர்களுடன் உரையாட வேண்டும். ஏராளமான கல்லூரிகள் திறன் மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கேட்டறிந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications