பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது கடமை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கனிமொழி எம்பி ட்வீட்
சென்னை: பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது கடமை என்று சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார விவகாரத்தை முன்வைத்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி எம்பி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த மாதம், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள். ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம் எனவும் கனிமொழி எம்பி பதிவிட்டிருந்தார். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications