மாத சம்பளதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. லட்டு மாதிரி எட்டு அறிவிப்புகள்! EPFO கொடுத்த சூப்பர் அப்டேட்!
சென்னை: தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் வருங்கால நிதி சேமிப்புகளை பாதுகாக்கும் EPFO (Employees' Provident Fund Organisation), சமீபத்தில் பல முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் பணம், ஓய்வூதியம் மற்றும் கணக்குகளை எளிதாக ஆன்லைனில் நிர்வகிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த புதிய மாற்றங்களால் தொழிலாளர்களுக்கு 8 நன்மைகள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இபிஎஃப்ஓ என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் மாதம் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறது. மேலும் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் செலுத்துகின்றன.
இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி மற்றும் பென்ஷன் நிதி ஆகியவை தங்கள் கணக்கில் பராமரிக்கப்படும். பணியில் இருந்து ஓய்வு பெறும் போது இந்த நிதி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அவசர தேவைக்காகவும் இபிஎஃப்ஓ பணத்தை தொழிலாளர்கள் எடுத்துக் கொள்ளலாம். அவை என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..

டிஜிட்டல் மயமாக்கல்
EPFO தற்போது தனது சேவைகளை முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றியுள்ளது. புதிய "EPFO 3.0" முறைமையில், கோர் பேங்கிங் மற்றும் API இணைப்புகள் மூலம் உறுப்பினர்கள் தங்கள் பண பரிமாற்றங்களை உடனுக்குடன் பார்க்க முடியும். இதனால் அலுவலக சிக்கல்கள் குறைந்து, நேரடி வசதி கிடைக்கும்.
பணம் எடுக்கும் விதிகள் எளிதாக்கம்
முன்பு 13 பிரிவுகளாக இருந்த பணம் எடுக்கும் விதிகள், தற்போது மூன்று பிரிவுகளாக சுருக்கப்பட்டுள்ளன - அவசர தேவைகள், வீட்டு தேவைகள், சிறப்பு சூழ்நிலைகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் நிதி திரும்பப்பெறும் செயல்முறை விரைவாக முடிகிறது.
கல்வி, திருமண செலவுகள்
கல்விக்காக 10 முறை வரை, திருமணத்திற்காக 5 முறை வரை பணம் எடுக்கலாம் என புதிய விதிகள் அனுமதிக்கின்றன. முன்பு இதற்கு கடுமையான வரம்புகள் இருந்தன.
100% பணம் எடுக்கும் அனுமதி
நீண்டகால நோய், வேலை இழப்பு போன்ற சில சூழ்நிலைகளில், ஊழியர்கள் தங்கள் EPF தொகையை முழுமையாக (100%) பெறலாம். முன்பு இது 75% வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
ஓய்வூதிய விதிகளில் மாற்றம்
முன்பு பணியில் இருந்து விலகிய பின் 2 மாதங்களில் ஓய்வூதியம் பெற முடிந்தது. புதிய விதிகளின்படி, இது 36 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்தவர்களுக்கு நிதி பாதுகாப்பு அதிகரிக்கும்.
டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் வசதி
ஓய்வூதியர்கள் இனி அலுவலகம் செல்லாமல், வீட்டிலிருந்தே தங்கள் லைஃப் சான்றிதழை (Life Certificate) ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். முதியோருக்கு இது மிகப் பெரிய உதவியாகும்.
தாமத வழக்குகளுக்கு தீர்வு
பணமெடுப்பு தாமதம் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக தீர்க்க "Vishwas Scheme" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேலை மாற்றம் எளிதாக்கம்
வேலை மாறும்போது, EPF கணக்கை புதிய நிறுவனத்துடன் இணைக்க தற்போது எந்த நிறுவனத்தின் ஒப்புதலும் தேவையில்லை. ஆன்லைனில் சில நிமிடங்களில் மாற்றம் செய்யலாம். இந்த மாற்றங்கள் மூலம் EPFO-வின் சேவைகள் மேலும் வெளிப்படையானவையும் வேகமானவையாகவும் மாறும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். புதிய டிஜிட்டல் முறைமை மூலம் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் அனைவரும் நேரடி நன்மை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications