மாத சம்பளதாரர்களுக்கு.. கொரோனாவால் இறந்தால் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு.. எப்படி பெறுவது?
சென்னை: தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு தருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமானோர் தினமும் உயிரிழந்து வருகிறார்கள். பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களும் இந்த தொற்றில் பலியாகி வருகின்றனர். அவர்களின் குடும்பம் அதன் பிறகு நிர்கதியாக நிற்கும் அபாயம் இருந்தது.
கோவாவின் பேரவலம்.. மருத்துவமனை தரையில் படுக்ககூட இடமில்லை.. ஸ்டோர் ரூமில் படுத்திருக்கும் நோயாளிகள்
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த குடுமபங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு ரூ.7 லட்சம் வரை நிவாரணம் தருகிறது.
என்ன அவசியம்
இதற்கு என்ன அவசியம் என்பதை இப்போது பார்ப்போம்- தனியார் நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் 20-க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டிருந்தால் அந்த நிறுவனம் கட்டாயம் தொழிலாளர் வருங்காலவைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) கீழ் பதிவு செய்ய வேண்டும். அதாவது தொழிலாளர்களுக்கு பிஎப் வசதியை நிறுவனங்கள் அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
7லட்சம் இழப்பீடு
அவ்வாறு பதிவு செய்துள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பணிபுரியும் காலத்தில் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்துக்கு தொழிலாளர் வைப்புசார் காப்பீடு திட்டத்தின் (இடிஎல்ஐ) கீழ் இழப்பீடு வழங்குகிறது. பொதுவாக இந்த இழப்பீடு ரூ.6 லட்சமாக இருந்தது. இப்போது, ரூ.7 லட்சமாக (அதிகபட்சம்) உயர்த்தி கடந்த ஏப்ரல் 28-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏன் தருகிறது பிஎப் நிறுவனம்
நீங்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறீர்கள், உங்களது நண்பர்கள் யாராவது கொரோனாலோ அல்லது வேறு காரணமாகவோ இறந்திருக்கிறார்கள் என்றால், அவர்களின் குடும்பத்திற்கு பயனுள்ளதாக இந்த தகவல் இருக்கும். பொதுவாகவே நிறுவனங்கள், ஒவ்வொரு ஊழியரின் காப்பீட்டுக்காக (இடிஎல்ஐ) அவரது அடிப்படை சம்பளத்தில் 0.50 சதவீத தொகையை மாதந்தோறும் செலுத்தி வருகின்றன. கொரோனா தொற்று மட்டுமல்லாமல் வேறு எந்த காரணத்தால் பணியாளர் உயிரிழந்தாலும் இந்த இழப்பீடு கிடைக்கும்.
இறப்பு சான்றிதழ்
பணிபுரிந்துவரும் காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தால் அல்லது பணியின் போது திடீரென உயிரிழந்தால் இழப்பீடு பெறலாம். அவ்வாறு இழப்பீடு பெற, படிவம் 5IF-ஐ பூர்த்தி செய்து, பணிபுரியும் நிறுவனத்தின் தரப்பில் கையெழுத்து பெற்று, ரத்து செய்யப்பட்ட காசோலையை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இறப்பு சான்று, வாரிசு சான்று ஆகியவற்றையும் அத்துடன் அளிப்பது அவசியம்.
ஒரு வாரத்தில் பணம்
இத்துடன் ஏற்கனவே இறந்தவரின் பிஎப் கணக்கில் உள்ள பணம் உள்பட இதர பயன்களைப் பெற படிவம் 20 (பிஎஃப் தொகை), படிவம் 10டி (ஓய்வூதியம்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் இந்த இழப்பீட்டுத் தொகை கிடைக்க தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. விண்ணப்பதாரர்கள் அளிக்கும் வங்கிக் கணக்கில் நேரடியாக இழப்பீடு தொகை ஒரு வாரத்தில் செலுத்தப்படுகிறது.
குறைந்தது ரூ.2.50 லட்சம்
தொழிலாளரின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.15 ஆயிரத்துக்குக்கீழ் உள்ளவர்களின் குடும்பத்துக்கு, அவர்கள் பெறும் சம்பளத்துக்கு ஏற்ப இழப்பீடு தரப்படுகிறது குறைந்தபட்ச இழப்பீடு ரூ.2.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிபட்ச தொகையாக ரூ.7 லட்சம் வரை இழப்பீடு தருகிறது. ஆனால் இடிஎல்ஐ திட்டத்தின்கீழ் முழுமையாக இழப்பீடு பெற, பிஎஃப்சந்தாதாரர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும். ஓராண்டுக்கு குறைவாக பணிபுரிந்திருந்தால் எவ்வளவு பிஎஃப் தொகை கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதோ அந்த தொகை தான் தரப்படும்.