ஒருங்கிணைந்த அதிமுக.. டெல்லி மேலிடத்தில் நேரடியாக பேசிவிட்ட எடப்பாடி பழனிசாமி.. தலையசைத்த அமித்ஷா!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக டெல்லி பாஜக மேலிடத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தனது கருத்தை முன் வைத்துவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம் பாஜக எந்த நெருக்கமும் காட்டாமல் அமைதி காப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூழலில், அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு இப்போதே மக்களை அழைத்து வருவதால், தொகுதி மக்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாஜகவும் கிட்டத்தட்ட தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. முறையாக ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டியை அமைத்து வருகின்றனர்.
ஆனால் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிமுக ஒருங்கிணைந்த குறித்த பேச்சுகள் எழுந்து வருகிறது. இதனை எடப்பாடி பழனிசாமியும் அறிந்தே வைத்திருக்கிறார். செங்கோட்டையனிடம் திடீரென கலகக் குரல் எழுந்த பின், எடப்பாடி பழனிசாமி அடுத்த சில நாட்களிலேயே டெல்லிக்கு விசிட் அடித்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஏனென்றால் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தனியாக சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். அந்த ஆலோசனையின் போதே, அதிமுக முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செங்கோட்டையனின் டெல்லி பயணம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஒருங்கிணைந்த அதிமுக தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அமித்ஷாவுடன் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இதன்பின் அடுத்த நாளே நயினார் நாகேந்திரனும் டெல்லி சென்றுவிட்டு, பின்னர் சேலம் வந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது ஒருங்கிணைந்த அதிமுக தொடர்பாக நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி இருக்கிறார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைந்த அதிமுக தொடர்பாக பேச வேண்டியவர்களிடம் பேசியாகிவிட்டது. இனியும் அதைப்பற்றி பேச ஒன்றுமில்லை என்று நேரடியாக கூறியதாக தெரிகிறது. இதன்பின் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்திற்கு அழைப்பு விடுத்துவிட்டு வந்துள்ளார். இதனால் ஒருங்கிணைந்த அதிமுக விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது.
இதனால் அமித்ஷாவும் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் பீகார் தேர்தல் முடிவடைந்த பின் டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் கூடுதல் கவனம் செலுத்த டெல்லி பாஜக தலைமை முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அப்போது பாஜக சில ஆலோசனைகளையும் கூறவும் வாய்ப்பு உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications