அடுத்து என்ன செய்யலாம்?.. கிரீன்வேஸ் சாலையில் குவிந்த ஆதரவாளர்கள்.. ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை
சென்னை: அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நிலையில் ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு தடை கோரியும், நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனத்தை ரத்து செய்யக் கோரியும் ஓபிஎஸ்ஸும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்துவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
இந்த வழக்கை கடந்த 10, 11 ஆம் தேதி நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்த போது இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர். அதிமுக பொதுக் குழு கட்சி விதிமுறைகளின் படி கூட்டவில்லை என்ற வாதத்தை ஓபிஎஸ் தரப்பு முன் வைத்தது.
பொய்கணக்கு காட்டி அதிமுக அரசு அவார்ட்? இறந்தவர்களை 'மறைத்ததாக’ புகார்! விருது பறி போக வாய்ப்பு?
அதிமுக பொதுக் குழு
ஆனால் அதிமுக பொதுக் குழு கூட்டத்தை மீண்டும் கூட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் 2000 பேர் கடிதம் எழுதியுள்ளார்கள். அதன் அடிப்படையில்தான் பொதுக் குழு கூட்டம் கூடியது என எடப்பாடி தரப்பு தன் வாதத்தில் முன் வைத்துள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவில் விதிகள் மீறியிருந்தால் இந்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நீதிபதி ஜெயசந்திரன் கூறியிருந்தார்.
இன்று தீர்ப்பு
இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக பொதுக் குழுவுக்கு எதிரான வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகிறது. இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக வெளியாகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தீர்ப்புதான் இரு தலைவர்களின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் என்பதால் இத்தனை எதிர்பார்ப்புகள் உள்ளன.
பாதகம்
இந்த வழக்கில் தமக்கு பாதகமாக வந்தால் என்ன செய்வது, சாதகமாக வந்தால் என்ன செய்வது என்பது குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமக்கு சாதகமாக வந்தால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கிவிடலாமா என்பது குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பரபரக்கும் சாலை
அது போல் தீர்ப்பு பாதகமாக வந்தால் அடுத்தது என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனைகள் பரபரக்கின்றன. நீண்ட நாளுக்கு பிறகு கிரீன்வேஸ் சாலையில் தொண்டர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. பட்டாசு, இனிப்புகளை இரு தரப்பினரும் வாங்கி வைத்து காத்துக் கிடக்கிறார்கள்.