உள்ளாட்சியில் 70% +30% இடங்கள்... மல்லுக்கட்டும் எடப்பாடி- ஓபிஎஸ்- ரணகளமாகும் மா.செ.க்கள் கூட்டம்?
சென்னை: சட்டசபை உள்ளாட்சித் தேர்தலில் எந்த கோஷ்டிக்கு அதிக இடங்கள் என்பதில் அதிமுகவில் பிரச்சனை வெடித்துள்ளது. ஓபிஎஸ், எடப்பாடி ஆகிய இருதரப்புமே 70% இடங்களை தங்களது கோஷ்டிகளுக்கு ஒதுக்குவதில் தீவிரம் காட்டுவதால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
ஊரக உள்ளாட்சிகளில் நிலுவையிலுள்ள 9 மாவட்டங்களுக்கும் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் செப்டம்பர் 15-க்குள் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகளுக்காவது தேர்தலை நடத்திடுவோம். நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அடுத்த ஆண்டு நடத்திக் கொள்ளலாம் என ஒரு யோசனையை முதல்வர் தரப்புக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.
தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளி வைக்க யோசனை கேட்டால் நடத்துவதற்கு யோசனை சொல்கிறார்கள் என ஆணையத்தின் மீது வருத்தப்படுகிறதாம் முதல்வர் அலுவலகம். இந்த சூழலில், செப்டம்பர் 15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமாயின் ஆகஸ்ட் 16-ந்தேதிக்குள் நோட்டிஃபிகேசனை இஷ்யூ பண்ண வேண்டும். அதற்கு நீண்ட நாட்களெல்லாம் இல்லை.

அதிமுக மா.செ.க்கள் கூட்டம்
அதனால் தேர்தலை திடீரென அறிவித்துவிட்டால் கடைசி நேரத்தில் தடுமாறக்கூடாது என்பதற்காக, அதிமுக மா.செ.க்களை தயார் படுத்த மா.செ.க்கள் கூட்டத்தை வருகிற 9-ந்தேதி சென்னையில் கூட்டுகிறார்கள் இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும். இந்த கூட்டத்தில் தேர்தல் நடக்க வேண்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் அதிமுக செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள் . அதில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் விரிவாக விவாதிக்கிறார்கள்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இந்த நிலையில், ஓபிஎஸ்சை அவரது ஆதரவாளர்கள் நேற்று சந்தித்திருக்கிறார்கள். அப்போது, ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வோம் என்ற ஆசையில் சட்டசபை தேர்தலில் நிறைய விட்டுக் கொடுத்துவிட்டீர்கள். இனியும் அப்படியிருந்தால் கொங்குவின் ஆதிக்கத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது.

அதிமுக நிலவரம்
தேர்தலுக்குப் பின்னர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் எடப்பாடி தரப்பு கைப்பற்றிவிட்டது. போகிற போக்கில் ஏதோ ஒன்றிரண்டு இடங்கள்தான் உங்களுக்கு என்கிற நிலைமையை உருவாக்குகிறார்கள். இது நமது எதிர்காலத்துக்கு எந்த வகையிலும் உதவாது.

உள்ளாட்சியில் 70% இடங்கள்
அதனால், உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் 70 சதவீத இடங்கள் உங்களுக்கும், 30 சதவீத இடங்கள் எடப்பாடிக்கும் இருக்கும் வகையில் பிரிக்க வேண்டும். இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள். இதிலும் கோட்டைவிட்டால் ஓபிஎஸ் எப்போதும் நம்பர் 2தான் என்கிற நிலையை கொங்கு பெல்ட் கட்டமைத்துவிடும் என தூபம் போட்டுள்ளனராம்.

எடப்பாடி தரப்பின் கணக்கு
ஓபிஎஸ்சும் இந்த பெர்சண்டேஜை வாங்கினால்தான் நமக்கு மரியாதை என்கிறாராம். இதே சதவீத கணக்குகளைத்தான் எடப்பாடியும் போட்டுக்கொண்டிருக்கிறாராம். அதனால், மா.செ.க்கள் கூட்டத்தில் ரகளை வெடிக்கலாம் என்கிறது அதிமுக தரப்பு.












Click it and Unblock the Notifications