எடப்பாடி தலையில் விழுந்த இடி.. பறிபோகும் எம்எல்ஏ பதவி? இறுதி முடிவு சபாநாயகர் கையில்! அதகள அதிமுக!
சென்னை: தமிழக அரசியலில் அதிமுக உள்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி எஸ்.பி. வேலுமணி அணி நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் நியமிக்கும் கொறடாவுக்கே அதிகாரம் உண்டு என எடப்பாடி தரப்பு சொன்னாலும், பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையில் எஸ்பி வேலுமணி தரப்புக்கே கொறடா அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என கூறுகின்றனர். ஒருவேளை எஸ்பி வேலுமணி தரப்பு அங்கீகரிக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் எம்எல்ஏ பதவி பறிபோகவும் வாய்ப்பு உள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து வாக்களித்தது அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் அணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்புக்கு முன்பாக, அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்திருந்தது.
தமிழக சட்டசபை
அவரது உத்தரவின்படி அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், வேலுமணி அணி இதை ஏற்காமல், தாங்களே சட்டமன்றக் குழுவின் உண்மையான பெரும்பான்மை அணி என்றும், சி. விஜயபாஸ்கர்தான் கொறடா என்றும் வாதிட்டு வந்தது. அதன்படி, அவர்கள் தனியாக முடிவு எடுத்து விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவை மீறி நடந்த 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்கனவே வலியுறுத்தி வந்தது.
எஸ்பி வேலுமணி
இந்த சூழலில் தற்போது எஸ்.பி. வேலுமணி அணியும் அதிரடி நகர்வை மேற்கொண்டுள்ளது. அந்த அணியின் கொறடாவாக அறிவிக்கப்பட்டுள்ள சி. விஜயபாஸ்கர், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். அந்த மனுவில், "உண்மையான அதிமுக சட்டமன்றக் குழு நாங்கள் தான். எங்கள் கொறடா உத்தரவை மீறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம்
இதன் மூலம் அதிமுகவின் இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் தகுதி நீக்க நடவடிக்கை கோரி சபாநாயகரை அணுகியுள்ளன. இதனால், தற்போது முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. அது "அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா யார்? சட்டமன்றக் குழுத் தலைவர் யார்?" என்பதுதான். அரசியல் மற்றும் சட்ட ரீதியாக பார்க்கும்போது, பொதுச் செயலாளர் நியமிக்கும் கொறடாவுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
அந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி நியமித்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கே சபாநாயகர் அங்கீகாரம் வழங்க வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது. ஆனால், வேலுமணி அணியினர் தங்களிடம் அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக வாதிட்டு வருகின்றனர். இதனால் சபாநாயகர் எடுக்கும் முடிவு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விவகாரம் அடுத்த கட்டமாக நீதிமன்றம் வரை செல்லும் வாய்ப்பும் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் இன்னும் சில நாட்களில் அதிமுகவின் எதிர்கால தலைமை யார்? சட்டமன்றக் குழு கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்து விடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications