“கார் இல்லாததால் கிடைத்த காரில் ஏறினேன்”.. உடனிருந்த தொழிலதிபர் பற்றிய கேள்விக்கு எடப்பாடி மழுப்பல்
சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அரசு வாகனத்தில்தான் சென்றேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, சந்திப்பு நிறைவடைந்து திரும்பிய கார் குறித்து மழுப்பலாக பதில் அளித்துள்ளார். கிடைக்கிற காரில் ஏறிச் சென்றேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

எடப்பாடி - அமித் ஷா மீட்டிங்
அதே போல எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பொதுப்பிரச்சனைகள் தொடர்பாகவும், குறிப்பாக முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் கோரிக்கை மனு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் எம்பி, கே.பி.முன்னுசாமி, தம்பிதுரை ஆகியோர் இருந்தனர்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற அமித்ஷா உடனான சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி சுமார் 20 நிமிடங்கள் அமித்ஷாவுடன் தனியாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடியபடி இருந்தது கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பேட்டி
இந்நிலையில் சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர், "அன்று காலை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துக் கூறச் சென்றேன். அப்போதும் அரசு காரில் தான் பயணித்தேன். இதுபற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியிடுவீர்கள் என்று கருதி தான் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அரசு காரில் சென்றேன்.
கார் பற்றி விளக்கம்
மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் வீட்டிற்கு செல்லும் போதும் அரசு காரில் தான் பயணித்தேன். இந்த சந்திப்பு முடிவடைந்ததும் அமித் ஷா அவருடைய வேலையில் கவனம் செலுத்த தொடங்கினார். நான் காரில் புறப்பட்டு திரும்பும் போது என்னுடைய முகத்தை துணியால் துடைக்கிறேன். அதை எடுத்து அரசியல் செய்கிறீர்கள். இதை நினைத்து பார்க்கும் போது வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது." என்றார்.
எடப்பாடி மழுப்பல் பதில்
காரில் எடப்பாடி பழனிசாமி உடன் இருந்த தொழிலதிபர் குறித்த கேள்விக்கு, "உள்துறை அமைச்சரை சந்திப்பதை மட்டும் தான் பார்க்க வேண்டும். ஒருவர் போவது வருவதை பற்றி எல்லாம் பார்க்கக்கூடாது. நாங்கள் சந்தித்த பிறகு அமித் ஷாவை தனியாக சந்திக்கக் காத்திருந்தார். உள்துறை அமைச்சர் பல சந்திப்புகளில் பிஸியாக இருந்தார். தாமதம் ஆகும் என்பதால் கிளம்பச் சொன்னார்கள். இவர்களைப் போல என்னிடம் பல கார்கள் இல்லை. இந்த கார் அந்த கார் என மாறிச் செல்வதாக சொல்கிறீர்கள். கார் இல்லாததால் கிடைக்கிற காரில் ஏறிச் செல்கிறேன்.
கொடுத்த காரில் ஏறிச் செல்ல முடியாததால், கிடைத்த காரில் ஏறிச் சென்றேன். கிடைத்த காரில் ஏறிச் சென்றதால் கொடுத்த கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் குற்றச்சாட்டை கண்டுபிடித்துப் பேசினால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ஸ்டாலினிடம் இப்படியா கேட்கிறீர்கள்."என எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications