கூடியது சட்டசபை..தலைமைச் செயலகத்தில் மீட்டிங் போட்ட எடப்பாடி! மிஸ்ஸான அதிமுக புள்ளி! அடுத்த விக்கெட்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் மரணம், இருமல் மருந்து விவகாரம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழல்களுக்கிடையே தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது முதல் நாளில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறையில் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தை புறக்கணித்து இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
சட்டசபைத் தலைவர் மு. அப்பாவு கடந்த மாதம் கூட்டத்தொடர் அக்டோபர் 14 முதல் 17 வரை நடைபெறும் என அறிவித்திருந்தார். கரூர் கூட்ட நெரிசல் மரணம், இருமல் மருந்து விவகாரம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழலில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று (அக்.14) தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இன்று காலை தொடங்கிய கூட்டத்தில், கரூர் வேலுச்சாமிபுரம் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர்
அதேபோல், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகலாந்து ஆளுநர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன், அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி உள்ளிட்டோருக்கும் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதற்குப் பிறகு, சட்டசபை நடவடிக்கைகள் இன்று ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டன.
சட்டசபை கூட்டம்
இந்நிலையில், சட்டசபை வளாகத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் கூட்ட நெரிசல், குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான கோல்ட்ரிப் இருமல் மருந்து விபரீதம், மேலும் தமிழக அரசைச் சுற்றியுள்ள பல சர்ச்சைகள் ஆகியவை இடையே, இந்த சட்டசபை கூட்டம் தொடங்கியுள்ளதால், அதிமுக எந்த விஷயங்களில் வலுவாக குரல் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி பழனிசாமி விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியல்
இக்கூட்டத்தில், வரவிருக்கும் நாட்களில் சட்டசபையில் எது விவாதத்திற்கு வரலாம், யார் எந்த விவகாரத்தில் பேச வேண்டும், எப்படி அரசை எதிர்க்கட்சியாக தாக்குவது என்ற குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இக்கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் என்பதும் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என 'திறந்த மனதுடன்' செங்கோட்டையன் பேசியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி
இந்த விவகாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டு அமித்ஷாவை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததோடு இனி அதிமுக எதிர்ப்பு தலைவர்களை பாஜகவினர் சந்திக்கக் கூடாது என கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது.
அதிமுக எம்எல்ஏக்கள்
அதற்கு பிறகு எவ்வித அரசியல் நிகழ்வுகளிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் இருந்தால் இருந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரை ஒட்டி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தி எம்எல்ஏக்களாக செயல்பட்டு வரும் நிலையில் அந்த வரிசையில் செங்கோட்டையனும் இணைந்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications