“சோலோ”.. தேர்தலில் தனித்து போட்டியிடுகிறதா அதிமுக? எடப்பாடி சொன்ன மேட்டர் - பாஜகவை மட்டும் தாக்கல
சென்னை: அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெற்ற கருத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிட உள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதி கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது, "புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு எதிரிகளும், துரோகிகளும் எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து நின்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்திடத் துடித்த நேரத்தில், நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடும். என் உயிருக்கு நிகரான கழகத் தொண்டர்களின் பேராதரவோடும், அனைத்து சதிகளையும், சூழ்ச்சிகளையும் வீழ்த்தி கழகத்தை மீட்டு, வீறுநடை போடச் செய்திருக்கிறோம்.

புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட கழகம், புரட்சித் தலைவி அம்மா அவர்களால் "இன்னும் நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் பணியாற்றும்" என்று பேரறிவிப்பு செய்யப்பட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நேரத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 29 மாத கால விடியா திமுக ஆட்சி, தமிழ் நாட்டின் உரிமைகளை காவு கொடுத்து மக்களின் வாழ்வை துயர் மிகுந்ததாக மாற்றிவிட்டது. மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்வு என்று மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எங்கெங்கு காணினும் கள்ளச் சாராயமும், கஞ்சா புழக்கமும் தமிழ் நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ வேண்டிய சட்டமன்றமே, ஜனநாயகத்தின் புதைகுழியாக மாற்றப்படுகிறது. ஒரு குடும்பம் தமிழ் நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறது.
இந்தியத் திருநாடு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் காக்கும் வண்ணம், மக்களை நம்பிகழகம் தேர்தலை சந்திக்க இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது என்கிற வெற்றிச் செய்தி தான், தமிழ்நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் முழக்கமாக அமையும் என்பதை நாம் அனைவரும் மனதில் நிலைநிறுத்தி அயராது பணியாற்றிட வேண்டும்.
52 ஆவது ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடியெடுத்து வைக்கும் இந்த நன்நாளில், காவிரி உரிமையை காவு கொடுத்து, விவசாயிகளை அழிக்கத் துடிக்கின்ற; மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி உள்ள; சட்டம்-ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, இந்த ஆளுமைத் திறனற்ற விடியா ஆட்சியாளர்களின் ஊழல் ஆட்சிக்கு முடிவுரை எழுதிட நாம் அனைவரும் சூளுரை ஏற்போம்; வெற்றி காண்போம்.
நம்பிக்கையோடு களம் அமையுங்கள்... நிச்சயம் வெல்வோம்!!
40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் நாளைய தமிழ் நாடு வளமாகும்!!
வாழ்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!
வெல்க புரட்சித் தலைவரின் பேரியக்கம்!
வாழ்க புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழ்!" என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதில் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதாக அறிவித்த பின், இஸ்லாமிய இயக்கங்கள், பாமக, சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட இருப்பதாக பேச்சு உள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி சேர்த்து 40 நாடாளுமன்ற இடங்களிலும் அதிமுக வெல்லும் என அவர் குறிப்பிட்டு உள்ள தனித்து போட்டியிடுவதற்காக சமிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இந்த கடிதத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து உள்ள எடப்பாடி பழனிசாமி, கூட்டணியை விட்டு முறித்துக்கொண்ட பிறகு மத்திய பாஜக அரசை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications