சசிகலா விவகாரம்... அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை
சென்னை: சசிகலா விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று ஆலோசனை நடத்தினர்.
Recommended Video
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வருகை தருகிறார். அதிமுக நிர்வாகிகள் ஆங்காங்கே சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
சசிகலா ஆதரவு போஸ்டர்கள்
சென்னையில் அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையிலும் கூட சசிகலா ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஓபிஎஸ் தரப்பு
சசிகலா விவகாரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் தரப்பு இதுவரை அமைதியாக இருக்கிறது. ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், வெளிப்படையாக சசிகலா நலம்பெற வாழ்த்தும் சொல்லி இருக்கிறார்.
சசிகலா ஆதரவா?
மேலும் இந்த முறை சசிகலாவை ஓபிஎஸ் தரப்பு ஆதரிக்கும்; சசிகலாவை வரவேற்க ஓ. பன்னீர்செல்வமே செல்வார் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆலோசனை
சசிகலா விவகாரத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை இணைந்து எடுப்பது? அதிமுக தலைமை கழகத்துக்கு சசிகலா வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது? ஏற்கனவே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு விவரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.