நாங்க கொண்டு வந்த திட்டத்துக்கு ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்.. பாயும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஊட்டி மருத்துவக் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில், அவரை விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 700 படுக்கை வசதி, பழங்குடியினருக்கு தனி வார்டு, 12 அறுவை சிகிச்சை அரங்குகள், எம்.ஆர்.ஐ ஸ்கேன், சி.டி ஸ்கேன் வசதி, இருபாலருக்கான தனி தனி காத்திருப்போர் அறை உள்பட பல்வேறு வசதிகள் கொண்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நாளை திறக்கப்படுகிறது.

ஊட்டி செல்லும் ஸ்டாலின்
இதற்காக இன்று உதகைக்குச் செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். தொடர்ந்து திமுக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு மாளிகைக்கு சென்று தங்குகிறார்.
நாளை (ஏப்ரல் 6) ஞாயிற்றுக்கிழமை காலை ஊட்டியில் புதிதாக ரூ.499 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கிறார். சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற பெருமையை நீலகிரி மருத்துவக் கல்லூரி பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமி காட்டம்
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டவுள்ளார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலட்சிய எண்ணத்தை, 11 மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்றாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, அதற்கு 447.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்வடிவம் கொடுத்தது எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு.
ஸ்டிக்கர் ஒட்டுகிறார்
ஆனால், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதாலேயே, ஏறத்தாழ 4 ஆண்டுகள் வேண்டுமென்றே ஆமை வேகத்தில் செயல்பட்டு, இன்று ஸ்டிக்கர் ஒட்டவுள்ளார் மு.க.ஸ்டாலின். அதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சியே.
இருப்பினும், திமுகவின் அரசியலுக்காக நீலகிரி மக்களை இத்தனை ஆண்டுகள் அலைக்கழித்திருக்க வேண்டாம். நாம் நடத்திய "தமிழ்நாடு மாடல்" ஆட்சியின் பெருமைமிகு சின்னங்களாக 11 மருத்துவக் கல்லூரிகளும் காலங்கள் கடந்து திகழட்டும்! நம்மைப் போன்றே அயராது மக்கள் சேவை ஆற்றட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.
ஊட்டி மருத்துவக் கல்லூரி
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் 150 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் பிரிவில் கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஏற்கனவே மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சேவை நடைபெற்று வருகிறது. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்கட்டமைப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கான 750 விடுதி அறைகள் உள்ளன.
சுமார் ரூபாய் 499 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இக்கல்லூரி வளாகமானது இந்து நகரில் 25 ஏக்கர், இதை ஒட்டிய பகுதிகளில் 15 ஏக்கர் என மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் 700 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications