“சைக்கிள் ஓட்டி நேரத்தை வீணடித்ததுபோல்…” முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் பற்றி எடப்பாடி காட்டம்
சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐந்தாவது முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த பயணங்களில் முதல்வர் சைக்கிள் ஓட்டி நேரத்தை வீணடித்ததுபோல் இல்லாமல், இந்த முறை தமிழ்நாட்டுக்குத் தேவையான முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் இந்தச் சுற்றுப்பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், "கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றபோது, சைக்கிள் ஓட்டி பொன்னான நேரத்தை வீணடித்தார். அந்தப் பயணங்களால் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைத்தது என்று தெரியவில்லை.

சைக்கிள் ஓட்டுவதை தவிர்த்து
இந்த முறையாவது வீணாக சைக்கிள் ஓட்டுவதைத் தவிர்த்து, தமிழகத்திற்குத் தேவையான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த நான்கு ஆண்டு கால வெளிநாட்டு பயணங்களில் ஈர்த்த முதலீடுகள் மற்றும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும், அவை நடைமுறைக்கு வந்துள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த ஐந்தாவது பயணம் தமிழகத்துக்கு எந்தவிதமான பொருளாதாரப் பலன்களையும் அளிக்காது." எனத் தெரிவித்துள்ளார்.
குடும்ப முதலீடு செய்யவா?
மேலும் எடப்பாடி பழனிசாமி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது குடும்ப முதலீடு செய்யவா? ஆட்சி முடிவடைய இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்வது பற்றிய மக்களின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிப்பாரா?
ஆரம்பம் முதல் ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு வெள்ளை அறிக்கையை பற்றி மூச்சு விடவில்லை.
விவேக் காமெடி
நான் முதலமைச்சராக இருந்தபோது, 2019-ம் ஆண்டு ஒரு முறை மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 41. கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஆனால் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தைப் பற்றிய செய்தி அறிந்தவுடன், திரைப்படத் துறையில் மறைந்த 'சின்ன கலைவாணர்' என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விவேக் அவர்களது நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது. இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது செய்துள்ளேனா? என்று விவேக் அவரின் அடிபொடிகளிடம் கேட்பார் 'ஒன்றுமே இல்லை' என்று அவர்கள் பதில் அளிப்பார்கள் உடனே விவேக் அதுதான் மக்களுக்கும் என்பார்.
அதுபோல் ஸ்டாலின் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். சொல்லும்படியாக ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா? இந்த முறை அதைத் தவிர்த்து தமிழகத்திற்குத் தேவையான முதலீட்டை ஈர்க்க வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications