108 menu: நயினார் நாகேந்திரன் வீட்டில் எடப்பாடிக்கு ராஜ விருந்து! 108 ஐட்டங்கள்! மெனு என்ன தெரியுமா?
சென்னை: 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று இரவு ராஜ விருந்து அளித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். மொத்தம் 108 வகையான உணவுகள் தடபுடலாக தயார் செய்யப்பட்டு அதிமுக, பாஜக தலைவர்களுக்கு பரிமாறப்பட்டது.
அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததுமே இது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்பட்டது. மேல் மட்ட தலைவர்கள் ஒன்றாகிவிட்டாலும் அடிமட்ட தொண்டர்கள் யாருமே ஜெல்லாகவில்லை என்றெல்லாம் பேசப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் கூட்டு ஆட்சி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அது போல் அவர் சில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தின் முதல்வராக அதிமுகவை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என சொல்லியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லாமல் அதிமுகவை சேர்ந்த ஒருவர் என அமித்ஷா சொல்லியதும் அதிமுகவில் பேசும் பொருளானது. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி முறியும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர். ஆனால் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி, வலிமையாக உள்ளது என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலையொட்டி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். தற்போது நெல்லை மாவட்டத்தில் 3 நாட்கள் பிரச்சாரம் செய்ய எடப்பாடி முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடையே இணக்கமும் தொண்டர்களிடையே நெருக்கமும் உருவாக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சொந்த ஊரான நெல்லைக்கு வந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று இரவு விருந்து வைக்க அழைத்தார்.
அதன்படி இன்று இரவு ராஜ விருந்து வழங்கப்பட்டது. நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள நயினார் நாகேந்திரன் விருந்து ஏற்பாடுகள் காலை முதல் தடபுடலாக நடந்து வருகிறது. இரவில் நடந்த விருந்தில் அதிமுக தலைவர்கள், பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார், கடம்பூர் ராஜூ, எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்றனர். பாஜக சார்பில் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விருந்தில் 108 வகையான சைவ உணவுகள் மற்றும் 15 வகையான உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது. ஸ்பானிஷ், சைனீஸ் வகைகளை உள்ளடக்கிய 4 வகையான சூப், தாய் மற்றும் இந்திய வகைகளை சேர்ந்த இரு வகையான சாலட், இட்டாலியன், கொரியன், சைனீஸ், தென்னிந்திய வகைகளை உள்ளடக்கிய 9 வகையான ஸ்டார்டர்கள், 3 வகையான பார்பிக்யூ, 5 வகையான வடமாநில சாட்கள், 3 வகையான திருநெல்வேலி அல்வா , 11 வகையான இனிப்பு, 3 வகையான போலிகள், இரு வகையான இட்லி, அம்மனி கொழுக்கட்டை பரிமாறப்பட்டது.
மேலும் பூண்டு குழம்பு, சிவப்பு சம்பா இடியாப்பம், நெல்லை சொதி, கேரள புட்டு, குஜராத் டோக்ளா, 4 வகையான பஞ்சாபி பாரம்பரிய ரொட்டி, பாரம்பரிய சிறுதானிய உணவுகள், 8 வகையான சாதங்கள்,14 வகையான தோசைகள், 6 வகையான அப்பளங்கள், பில்டர் காபி, நன்னாரி பால், பழ துண்டுகள், 17 வகையான ஐஸ்கிரீம்கள், 7 வகையான ஆரஞ்சு, தர்பூசணி ஜூஸ்கள் என மொத்தம் 108 உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. இந்த விருந்து சமைக்கும் பணி நெல்லையில் உள்ள பிரபல தனியார் உணவு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications