எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி செல்ல இருந்தனர். கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியும், உதயநிதி ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசி வரும் நிலையில் இருவரும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் செய்ய இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடைசி நேரத்தில் தனது பயணத் திட்டத்தை மாற்றினார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாறி மாறி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.

இந்நிலையில், நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து 12.40 மணி அளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருச்சிக்கு செல்ல இருந்தார். அதே விமானத்தில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க, உதயநிதி ஸ்டாலினும் செல்ல இருந்தார்.
எடப்பாடி பழனிசாமியும், உதயநிதி ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின்போது இருவரும் கடுமையாக வார்த்தைப் போர் புரிந்து வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் விழும் புகைப்படத்தை காண்பித்து உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எடப்பாடி பழனிசாமி, சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தார்.
இந்தச் சூழலில், இருவரும் ஒரே விமானத்தில் செல்ல இருந்தது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது. இருவரும் செல்ல இருந்தது சிறிய ஏடிஆர் ரக விமானம் என்பதால் இருவருக்கும் அருகருகே சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரே விமானத்தில் பயணிக்க இருந்த திட்டத்தை கடைசி நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் மாற்றினார்.
அதாவது, உதயநிதி ஸ்டாலின் தனது 12.40 மணி பயணத்தை ரத்து செய்துவிட்டு, இன்று மதியம் 2 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார். அதேநேரம் திட்டமிட்டபடி அதே விமானத்தில் பழனிசாமி திருச்சிக்கு பயணம் செய்தார்.












Click it and Unblock the Notifications