ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை.. தமாகா நிகழ்ச்சியில் இணைந்த கைகள்!
சென்னை: ஜிகே மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் அரங்கின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்துள்ளனர். இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அருகருகே அமர்ந்திருப்பது இரு கட்சியினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பிரிந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அண்ணாமலை. அதிமுக தலைவர்கள் பற்றியும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் கடுமையாக விமர்சித்து வந்தார். ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்று அழைத்து நேரடியாக மோதினார். இதன்பின் அண்ணாமலை பதவி பறிப்புக்கு பின், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது.

ஆனாலும் அண்ணாமலை தரப்பில் அதிமுக கூட்டணியை உடைக்கும் முயற்சிகள் நடந்தன. கூட்டணி ஆட்சி என்று தொடர்ந்து பேசி வந்த அவர், ஒரு கட்டத்தில் பாஜக ஆட்சி என்றே கூறத் தொடங்கினார். இதனால் அதிமுகவினர் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். அதேபோல் முதல்வர் வேட்பாளரை டெல்லி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
இதனால் எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை இடையிலான மோதல் தொடர்ந்து வருவதாக பார்க்கப்பட்டது. ஆனால் நெல்லையில் நடந்த பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஒவ்வொரு பாஜக தொண்டனும் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். அதேபோல் மதுரையில் ஒருபடி மேல் சென்று, பாஜகவினர் உயிரைக் கொடுத்து பணியாற்றி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்றார்.
அண்ணாமலையின் இந்த மாற்றம் அதிமுகவினருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் ஜிஜே மூப்பனாரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருகில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. அப்போது அண்ணாமலையை அருகில் அழைத்து எடப்பாடி பழனிசாமி அமர வைத்துக் கொண்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் நேரடியாக மோதிக் கொள்ளவில்லை என்றாலும், மறைமுகமாக மோதி வந்தனர்.
தற்போது இணைந்த கைகளாக ஒரே நிகழ்ச்சியில் அருகருகே இருக்கை போட்டு அமர்ந்திருப்பது பலரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக இடையிலான நெருக்கம் அதிகரித்து வருவது அந்தக் கட்சி நிர்வாகிகள் இடையில் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications